சென்னை: ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ என்பது மூத்தோரின் அமுத வாக்கு. ‘தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது’ என்றார் நபிகள் நாயகம். ‘அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே’ என்றார் கவிஞர் வாலி. அள்ளித்தரும் வானமாய்த் திகழும் அன்னையரை சிறப்பித்துப் போற்றும் வாய்ப்புதான் உலக அன்னையர் தினம்.
நாளை மறுநாள் (மே 8 – ஞாயிற்றுக்கிழமை) உலக அன்னையர் தினத்தை ‘Quora தமிழ்’ அமைப்புடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கொண்டாடுகிறது. இதில் எங்களுடன் உலகத் தமிழர்களும் கைகோர்க்க வேண்டும் என்பதே எங்களது பெருவிருப்பம்.
எப்போதும் ‘தமிழால் இணைவோம்’ என்பதற்கு செயல் வடிவம் கொடுப்பதில் முனைப்புடன் திகழும் ‘இந்து தமிழ் திசை’, ‘அன்னையரைப் போற்றி வணங்க அனைத்துலக தமிழர்களே வாங்க’ எனும் தலைப்பில் ‘அன்னையர் தின சிறப்புக் கவியரங்கம்’ எனும் நிகழ்வை ‘Quora தமிழ்’ அமைப்புடன் இணைந்து நடத்துகிறது.
மே 8 மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறவுள்ள இந்தச் சிறப்புக் கவியரங்குக்கு வாசகர்களை வரவேற்கிறார் Quora தமிழ் அமைப்பின் சமூக மேலாளர் ஐஸ்வர்யா ரவிசங்கர். கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி தலைமை வகிக்கிறார்.
இதில், `இந்து தமிழ் திசை’ சார்பில் கவிஞர்கள் அன்புவல்லி சுப்புராஜ், பெருமாள் ஆச்சி, கனகாபாலன், வீரசோழன் திருமாவளவன், உமையவன் ஆகியோருடன் ‘Quora’ தமிழ் வாசகக் கவிஞர்கள் 10 பேர் கவிதை வாசிக்கின்றனர்.
உலகத் தமிழ் நேயர்களை மொழியால் இணைக்கும் இந்த நிகழ்வை https://www.htamil.org/00525 என்கிற லிங்க்-ல் நேரலையாகக் கண்டு ரசிக்கலாம். இதுதவிர, `இந்து தமிழ் திசை’யின் ஈவண்ட்ஸ் ஹோம் பேஜ் https://www.htamil.org/00220 லிங்க்-கிலும் கவியரங்கை கண்டு ரசிக்கலாம்.