[ad_1]
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீராம் என்னும் டீன் ஏஜ் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர், நிறம் சார்ந்த பிற்போக்குத்தனங்களை தனது செஃல்பி புகைப்படங்கள் மூலம் உடைத்து வருகிறார்.
நிறம்… இந்தியாவில் சாதி, மதங்கள் எவ்வாறு வேரூன்றி உள்ளதோ, அவ்வாறே நிறம் சார்ந்த பாகுபாடுகளும் வேரூன்றி இருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் ஆழமாகவே வேரூன்றி இருக்கிறது.
நிறம் சார்ந்த பாகுபாடுகள் சொந்த வீட்டிலிருந்தே தொடங்கி விடுகின்றன. பின்னர் ஏதோ ஒரு வடிவத்தில் இது பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தொடர்கின்றன. தொலைக்காட்சியில் பார்க்கும் விளம்பரம் முதல் திரைப்பட நாயகிகளின் தேர்வு வரை வெள்ளை நிறம்தான் அழகு என்ற போதனையைத் தொடர்ந்து இன்றைய இளம் தலைமுறையினரிடத்திலும் கொண்டு சென்று வருகின்றன. இதிலிருந்து ஆண்களும் தப்பிப்பதில்லை.
இதில், பிறக்கும் குழந்தை வெள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று மன அழுத்தத்துக்கு உள்ளாகும் இளம் தாய்மார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த நிற அரசியலில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெருங்கூட்டம் மனரீதியாக சிறுவயதிலிருந்தே தொடர்ந்து பலவீனப்படுத்தப்படுகிறது.
இவர்களில் சிலர் தங்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். சமூகத்தின் போதனையை ஏற்றுக்கொண்டு சிலர் வெள்ளை நிறம்தான் அழகு என்று அதனை நோக்கி ஓடிவிடுகிறார்கள்.
இவ்வாறு ஓடாமல் தன் நிறம் மீது காதல் கொண்டு, அதனை படைப்பாக்கி வருகிறார் பெங்களூரை சேர்ந்த ஸ்ரீராம் என்ற டீன் ஏஜ் சிறுவன். ஸ்ரீராமின் இந்த நம்பிக்கையே இன்ஸ்டாகிராமில் இவரை பிரபலமாகியுள்ளதுடன் இவருக்கான ரசிகர்களைப் பெற்று தந்திருக்கிறது.
இந்தப் பயணம் குறித்து ஸ்ரீராம் அளித்த பேட்டி ஒன்றில் பேசும்போது, “நான் முன்பெல்லாம் நம்பிக்கையுடன் இருந்ததில்லை. நான், என் நிறம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வில்தான் இருந்தேன். இதன் காரணமாகவே பள்ளியில் எனக்கு சிறந்த அனுபவம் கிடைக்கவில்லை.
எனக்கு நண்பர்களும் அதிக எண்ணிக்கையில் இல்லை. நான் வெள்ளையாவதற்கு அனைத்து முயற்சிகளை செய்து பார்த்தேன். எப்படி வெள்ளை நிறத்திற்கு மாறுவது என்றெல்லாம் இணையத்தில் தேடி பார்த்திருக்கிறேன்.
பின்னர், என் நிறத்தையும், என்னையும் நேசிக்க ஆரம்பித்தேன். விதவிதமான ஆடைகள் அணிந்து என்னை நானே புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். சமூக வலைதளங்களில் நடனம் ஆடி பதிவிட்டேன். இதற்கெல்லாம் கரோனா கால ஊரடங்கு எனக்கு உதவியாக இருந்தது. சுய புகைப்படங்கள் எடுப்பது என்பது எனது கலை, எனது படைப்பாற்றல், வண்ணங்களைப் பற்றிய எனது அறிவை வெளிக்கொணர உதவியது. அத்துடன், என் மீதான நம்பிக்கையை உணர உதவியது.
ஆண்கள் நகைகள் அணியக் கூடாது என்ற பிற்போக்குதனமான கருத்து சமூகத்தில் நிலவுகிறது. ஆனால், அதனை நான் உடைத்தேன். நகைகளை அணிந்துகொண்டேன். ஆரம்பத்தில் பலர் என் புகைப்படங்களின் கீழ் வெறுப்புக் கருத்துகளை பதிவிட்டனர். அவற்றை பார்க்கும்போது முதலில் எனக்கு கோபம் அதிகம் வந்தது. ஆனால், தற்போது நான் இந்த வெறுப்புக் கருத்துகளை எல்லாம் புறக்கணித்து விடுகிறேன்” என்று தெரிவித்தார்.
ஸ்ரீராமை அமேசான் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது விளம்பரத்திற்காக தொடர்பு கொண்டுள்ளனர். ஸ்ரீராமின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கம் > https://www.instagram.com/sriramyofficial/
[ad_2]
Source link