இந்தியாவில் இதுவரையில் விற்பனைக்கு வந்ததிலேயே மிக மிக மலிவு விலைக் கொண்ட கார் என்று டாடோ மோட்டார்ஸ் (Tata Motors) விற்பனைக்கு வழங்கிய நானோ காரை கூறலாம். ஏன் உலகின் மலிவு விலை காரும் இதுவே ஆகும். இந்த இடத்தை பிடிக்க இதுவரை எந்த நிறுவனமும் முன் வரவில்லை. அதாவது, டாடா நானோ (Tata Nano) போன்று மிகக் குறைவான விலையில் ஓர் காரை விற்பனைக்கு வழங்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை.
அந்தளவிற்கு மிக மிக மலிவு விலையில் கொண்டு வரப்பட்டதே டாடா நானோ. ஓர் இருசக்கர வாகனம் விற்கப்படும் விலைக்கு இணையான விலையிலேயே டாடா நானோ விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. பாதுகாப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இந்தியர்களின் பயணத்தை பாதுகாப்பான மாற்றும் நல்லெண்ணத்திலேயே ரத்தன் டாடா இக்காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தார். இது அவரது கனவு வாகனமும்கூட.
இந்த நிலையிலேயே ரத்தன் டாடா மீண்டும் அக்காரை இந்தியா கொண்டு வந்த காரணத்தை நினைவு கூர்ந்திருக்கின்றார். அதாவது, தன்னை டாடா நானோ காரை தயாரிக்க தூண்டிய நிகழ்வை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கின்றார். இந்தியாவில் இருசக்கர வாகன பயன்பாட்டாளர்கள் மிக அதிகம். நான்கு சக்கரக வாகனங்களைவிட மிக மிக அதிகளவில் டூ-வீலர்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஆகையால், இந்திய சாலையில் கார்களைக் காட்டிலும் மிக அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு, மூன்று பேர் அடங்கிய ஓர் குடும்ப ஒற்றை ஸ்கூட்டரில் பயணித்த காட்சியே ரத்தன் டாடாவை நானோ காரை உருவாக்க தூண்டியிருக்கின்றது.
தந்தை இருசக்கர வாகனத்தை இயக்க, பின்னிருக்கையில் தாய் பயணிக்க, அவர்கள் இருவருக்கிடையில் குழந்தை அமர்ந்திருந்த அந்த காட்சியே ரத்தன் டாடாவின் மனதை நெருக்கடிக்கு ஆளாக்கியது. இதுவே டாடா நானோவின் உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்தது.
பாதுகாப்பற்ற இருசக்கரங்களில் பயணிப்பது ஆபத்தானது. அதிலும், இந்தியர்கள் பலர் குடும்பம் குடும்பமாக அவற்றில் பயணிப்பது ரத்தன் டாடாவை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கியது. இதன் விளைவாக முதலில் ஓர் பாதுகாப்பான இருசக்கர வாகனத்தை உருவாக்க அவர் முயற்சித்தார். ஆனால், அது கடைசியில் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றது.
இந்த நிகழ்வுகளையே மீண்டும் நினைவுகூர்ந்த ரத்தன் டாடா அதுகுறித்த பதிவை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கின்றார். இதுகுறித்து அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “முதலில் நாங்கள் இரு சக்கர வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பானதாக மாற்றுவது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம்.
அந்த டூடுல்கள் நான்கு சக்கர வாகனமாக மாறியது. ஜன்னல்கள், கதவுகள் இல்லாமலேயே அது முதலில் உருவாக்கப்பட்டது. ஆனால், அது தரமற்றதாக தென்பட்டது. இதன் பின்னரே எங்களின் இந்த உருவாக்கம் காராக இருக்க வேண்டும் என இறுதி முடிவு செய்யப்பட்டது. நானோ கார் எப்பொழுதும் நம் எல்லா மக்களுக்கும் பொருந்தும்” என்றார்.
ரத்தன் டாடாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியர்கள் பலரின் மத்தியில் இப்பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. லட்சக் கணக்கானோர் இப்பதிவை லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த பதிவின் வாயிலாக டாடா மோட்டார்ஸ் முதலில் நானோவை பாதுகாப்பான இருசக்கர வாகனமாகவே உருவாக்க இருந்ததும், கடைசியில் அதனை நான்கு சக்கர வாகனமாகவும் உருவாக்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
டாடா நானோ முதன் முறையாக 2008லேயே அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வருகை ஒட்டுமொத்த வாகன உலகையே உலுக்கும் வகையில் அமைந்தது. காரணம் லட்ச ரூபாய் என்ற மிக மலிவான விலையில் அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், ரத்தன் டாடாவின் இந்த கனவு வாகனத்தால் நாட்டில் பெரியளவில் வெற்றி பெறவில்லை. குறைவு பாதுகாப்பு, திறன் குறைந்த எஞ்ஜின் உள்ளிட்டவை காரின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
தொடர்ந்து, 2019ம் ஆண்டில் நானோவின் அனைத்து உற்பத்தி மற்றும் விற்பனை பணிகள் நிறுத்தப்பட்டன. புதிய பாதுகாப்பு விதி மற்றும் மாசு உமிழ்வு விதிக்கு இக்காரை அப்டேட் செய்வது கூடுதல் செலவீணத்தையும், நஷ்டத்தையும் வழங்கும் என்கிற காரணத்தினால் இந்த முடிவு நிறுவனத்தினால் எட்டப்பட்டது. நானோவின் சகாப்தத்திற்கு முடிவு கட்டப்பட்டது.