இந்திய ஹாக்கி ஆடவர் அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் மகளிர் அணி கேப்டன் ராணி ராம்பாலும் கூட்டாக இணைந்து ரசிகர்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளானர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க சில தினங்களே உள்ள நிலையில் இந்த கடிதம் வெளியாகி உள்ளது.
“ஐந்து ஆண்டுகளாக கொண்டிருந்த பெருங்கனவை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக உணர்கிறோம். இப்போது அது தொட்டு விடும் தூரத்தில்தான் உள்ளது. இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பத்திரமாக டோக்கியோ வந்துள்ளதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
View this post on Instagram
உலகளவில் நிலவும் அசாதாரண சூழலால் இந்த முறை ஒலிம்பிக் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஒட்டுமொத்த அணியும் பல தடைகளை கடந்தே இங்கு வந்துள்ளது. இது மிகவும் உணர்ச்சிமிக்க தருணம்.
இந்த நேரத்தில் எங்களது பயிற்சியாளர்கள் மற்றும் உடன் நிற்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். களத்தில் அணியாக இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என அந்த கடிதத்தில் இருவரும் தெரிவித்துள்ளனர். இந்த கடிதத்தை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது.
ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் குரூப் A-வில் இடம் பெற்றுள்ளனர். வரும் 24 ஆம் தேதியன்று இந்திய ஆடவர் அணி நியூசிலாந்துக்கு எதிராகவும், மகளிர் அணி நெதர்லாந்துக்கு எதிராகவும் விளையாட உள்ளது.