இப்போதெல்லாம் ஒரு பாலிவுட் படம் ரிலீஸ் ஆகிறதென்றால் அந்தப் படத்துக்கான புரொமோஷன் வேலைகளில் எமோஷனல் விஷயங்களைச் நிறையச் சேர்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக தொலைக்காட்சிகளில் நடைபெறும் ஏதாவது ஒரு பாப்புலரான ஷோவில் படத்திற்கான புரொமோஷன் இவ்வாறு நடைபெறும்.
அப்படி, அக்ஷய் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ‘ரக்ஷா பந்தன்’ படத்தின் புரொமோஷனுக்காக ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் அவரது தங்கை அல்கா பாட்டியாவின் (Alka) ஆடியோ ஒன்று போடப்பட்டது.
“நீங்க எனக்கு ஒரு நல்ல நண்பனாகவும் சகோதரனாகவும் தந்தையாகவும் இருந்திருக்கிங்க” என்று அவர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இதனைக் கேட்ட அக்ஷய் குமார் உணர்ச்சிவசப்பட்டார். பின் அவரது தங்கையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த அக்ஷய் குமார் கண்ணீர் விட்டார். “நாங்க ஒரு சின்ன வீட்லதான் இருந்தோம். ஆனா எனது தங்கை அல்கா பிறந்த பிறகு எல்லாம் மாறிருச்சு” என்று அக்ஷய் நெகிழ்ச்சியாகப் பேசினார்.
அண்ணன், தங்கை உறவைவிட பெரியது வேறு எதுவும் இல்லை என்றும் அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருக்கிறார். அக்ஷய் குமாரின் ‘ரக்ஷா பந்தன்’ படத்தை ஆனந்த்.எல்.ராய் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் பூமி பெட்னேகர், சாடியா கதீப், சஹேஜ்மீன் கவுர், தீபிகா கண்ணா மற்றும் ஸ்மிருதி ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் – தங்கைகள் குறித்த காமெடி எமோஷனல் டிராமாவாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
அக்ஷய் குமாரின் ‘ரக்ஷா பந்தன்’ படமும் ஆமிர் கானின் ‘லால் சிங் சத்தா’வும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய மோதல் ஏற்படும் என்று பாலிவுட்டில் பேசிவருகின்றனர்.
ஆனால் படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது ஏற்பட்ட மோதலின் போதே திரைப்படங்கள் ஒன்றாக வருவது பற்றிப் பேசிய அக்ஷய் குமார், “கோவிட்-19 காரணமாக, பல படங்கள் வெளியாகவில்லை, இன்னும் சில படங்கள் ரிலீஸ் தேதிக்காகக் காத்திருக்கின்றன. எனவே, அதிக படங்கள் ஒன்றாக வெளிவருவது இயல்பு. இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.