14 ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் எனவும் இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஞ்சியிருக்கும் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் போட்டி குறித்த தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். எஞ்சிய போட்டிகளை 25 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டியை இந்தியாவில் அக்டோபர் 15 ஆம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்து 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள், 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில் எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடத்த கடந்த வாரம் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.