சில்ஹெட்: மகளிருக்கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா – இலங்கை அணிகள் பிற்பகல் 1 மணிக்கு மோதுகின்றன. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா 6 முறை பட்டம் வென்றுள்ளது.
2012-ம் ஆண்டு முதல் இந்தத் தொடர் டி 20 வடிவில் நடத்தப்பட்டு வருகிறது. 50 ஓவர் வடிவில் இந்தியா 4 முறையும், டி 20 வடிவில் 2 முறையும் இந்தியா கோப்பை வென்றுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேசத்திடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.
சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற மகிழ்ச்சியுடன் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பை தொடரை அணுகுகிறது. டி 20 வடிவில் சமீபகாலமாக இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்படவில்லை. எனினும் ஆசிய அளவிலான போட்டி என்பதால் இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தக்கூடும்.
இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம் ஆகிய 7 அணிகள் பங்கேற்றுள்ளன.
ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 13-ம் தேதியும் இறுதிப் போட்டி 15-ம் தேதியும் நடைபெறுகிறது.