நிற்கக்கூட நேரம் இல்லை
கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க. அது என்னமோ சமந்தா வாழ்க்கையில் நிஜமாகி உள்ளது. திருமண வாழ்க்கையில் பின்னடைவை சந்தித்தாலும், சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார் சமந்தா, விவாகரத்துக்குப் பிறகு, அதீத கவர்ச்சியுடன் புஷ்பா திரைப்படத்தில், ஐட்டம் பாடலான ஊ சொல்றியா மாமா.. பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த திரை உலகையும் ‘ஊம்’ சொல்ல வைத்து விட்டார். தற்போது ஹாலிவுட், பாலிவுட், கோலிட், விளம்பர படம் என நிற்கக்கூட நேரம் இல்லாமல் படு பிஸியாக இருக்கிறார்.
விவாகரத்து குறித்து
தற்போது சமந்தா, பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று பல சுவாரசியமான கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அதில், விவாகரத்து பற்றி மனம் திறந்து பேசிய சமந்தா, வாழ்க்கை ‘Khabi Khushi Khabi’ படத்தில் வருவது போல சந்தோஷமா இருக்கும்னு பார்த்தா, கே.ஜி.எஃப் படம் மாதிரி ஒரே பிரச்சனையா இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 7ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
பாலிவுட்டில் சமந்தா
இதையடுத்து, கரண் ஜோஹரின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான, தர்மா புரொடக்ஷன்ஸுடன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிகை சமந்தா ஒப்பந்தமாகி உள்ளதாகவும். அந்த படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்த நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். கரண் ஜோஹர் தற்போது லண்டனில் இருப்பதால், அவர் மும்பை திரும்பியதும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
அடுத்தடுத்து படங்கள்
மேலும், நடிகை சமந்தா பாலிவுட் ஸ்டார் சல்மான் கானுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை அனீஸ் பாஸ்மே என்பவர் இயக்குகிறார். சமந்தா மட்டுமின்றி இப்படத்தில் நடிகை தமன்னாவும் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார் சமந்தா.