மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) காரை, பொது பார்வைக்கு கொண்டு வர தயாராகி விட்டது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி (August 11) காலை 11.30 மணிக்கு ஸ்கார்பியோ கிளாசிக் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என மஹிந்திரா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெக்னிக்கலாக பார்த்தால், முந்தைய தலைமுறை ஸ்கார்பியோ காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடல்தான் இது. விலைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருடன் இணைந்து, புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio-N) காரும் விற்பனை செய்யப்படும். அதாவது மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில், ஸ்கார்பியோ-என் என்ற புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஆனால் பழைய தலைமுறை ஸ்கார்பியோ கார் விற்பனையில் இருந்து விலக்கப்படாது. ஸ்கார்பியோ கிளாசிக் என்ற பெயரில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். S மற்றும் S11 என புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் 2 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் தேர்வுகளில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில், 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 137 பிஹெச்பி பவரையும், 319 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும்.
இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் 4×4 சிஸ்டமும் இடம்பெறாது என கூறப்படுகிறது. ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் மட்டுமே புதிய ஸ்கார்பியோ கிளாசிக் கார் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது.
அதிகாரப்பூர்வமான தகவல்கள் நமக்கு வரும் ஆகஸ்ட் 11ம் தேதி தெரிந்து விடும். புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் ஏற்கனவே டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கி விட்டது. எனவே ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலைகளை மஹிந்திரா நிறுவனம் உடனடியாக அறிவித்து, டெலிவரி பணிகளை விரைவாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில், புதிய க்ரில் அமைப்பு, புதிய மஹிந்திரா லோகோ, புதிய ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் தற்போது விற்பனைக்கு கொண்டு வரும் கார்களுக்கு இந்திய சந்தையில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.
புதிய தலைமுறை தார், புதிய எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ-என் என அனைத்து மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் உற்சாகமான வரவேற்பை வழங்கி வருகின்றனர். அதேபோல் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரும் வாடிக்கையாளர்களின் வரவேற்பை அள்ளுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மஹிந்திரா நிறுவனம் இதற்கு அடுத்தபடியாக 5 எலெக்ட்ரிக் கார்களை பொது பார்வைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த 5 எலெக்ட்ரிக் கார்களும், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில் ஒன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்கள், அதிகம் விற்பனையாகும் மாடல்களாக உள்ளன. எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் வாங்கியுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கு பயன்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதேபோல் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் மஹிந்திரா நிறுவனமும் முக்கியமான இடத்தை பிடிக்க விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாகவே வரும் ஆகஸ்ட் 15ம் தேதி மஹிந்திரா நிறுவனம் 5 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. எனவே எதிர்காலத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மஹிந்திரா நிறுவனம் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.