இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. அதன் மூலம் கேப்டன் கேன் வில்லியம்சனின் அணியினர் சரித்திர சாதனை படைத்துள்ளனர்.
இப்போது டெஸ்ட் கிரிக்கெட் உலகில் நியூசிலாந்து அணியின் 11 வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக உள்ளனர்.
ஒருபக்கம் மந்தமான வானிலை அச்சுறுத்த இந்த போட்டி நடைபெற்ற நான்கு நாள் ஆட்டத்தில் பெரும்பாலான செஷனை தனது கன்ட்ரோலில் வைத்திருந்தது நியூசிலாந்து அணி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசியது சாம்பியன் பட்டத்தை வெல்ல அடிப்படை காரணம்.
அது தவிர பேட்டிங்கில் கான்வே, கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
இந்தியா இந்த போட்டியில் டாஸை இழந்தது தோல்விக்கு மிகமுக்கிய காரணமாகும். அதே போல 8 பேட்ஸ்மேன்கள் (இரண்டு ஆல் ரவுண்டர் உட்பட) இந்திய அணியில் இருந்தும் ஒரு பேட்ஸ்மேன் கூட அரை சதம் கடக்காத டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது. இந்த மோசமான சாதனையை இங்கிலாந்தில் கடந்த 2018இல் லார்ட்ஸ் மைதானத்தில் செய்திருந்தது இந்தியா.
இந்தியாவின் ஆட்டம் ஒரு சாம்பியனின் ஆட்டம் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம். நியூசிலாந்து அணியின் ஆட்டம் அதற்கு நேர் எதிரானது.
இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வேகப்பந்து வீச்சாளர் கெய்ல் ஜேமிசன் வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
இருப்பினும் இறுதி வரை இந்தியா விடாமல் போராடியது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துகள்.