Published : 23 Jun 2021 03:11 am
Updated : 23 Jun 2021 06:10 am
Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 06:10 AM
நாட்டின் பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
இந்தியா என்ற பெயர் அடிமை பெயராக உள்ளது. எனவே இதை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதையே வைக்க வேண்டும். இந்தியா அதன் பண்டைய ஆன்மிகம் மற்றும் ஞானத்தில் வேரூன்றியிருந்தால் மட்டுமே உயர முடியும். அதுவே நமது மிகப் பெரிய நாகரிகத்தின் ஆன்மாவாக விளங்கக்கூடும்.
நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய உலகின் மலிவான நகலாக இல்லாமல், வேதங்கள், பகவத் கீதைமற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின்மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம். எனவே இந்த அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா?.
இந்தியா என்ற அடிமைப் பெயரை, பிரிட்டிஷார் நமக்குக் கொடுத்தனர். அதாவது சிந்து நதியின் கிழக்குப் பகுதியைக் குறிக்கும் வகையில் இது தரப்பட்டது. இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? உங்கள்குழந்தைக்கு சின்ன மூக்கு, 2-வதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா?
பிஎச் (பவ்), ரா (ராக்), தா (தாள்)என்ற பெயர்கள் இணைந்ததேபாரதம். நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே நாம் கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிக்கவர்களாகவும் இருந்தோம்.எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
சர்ச்சைக் கருத்துகளுக்காக அண்மையில் ட்விட்டர் சமூக வலைத்தளத்திலிருந்து கங்கனா நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் `கூ` சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார். அதில்தான் இந்தக் கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்தக் கருத்துப் பக்கத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகை கங்கனா ஷேர் செய்துள்ளார்.