‘டிவிஎஸ் எக்ஸ்எல்100 (TVS XL100) மொபட்டில் ராயல் என்பீல்டு பைக்கா’!.. நம்ப முடியலையே.. தலைப்ப தப்பா போட்டுட்டாங்களோ?., என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம். ஆனால், நீங்கள் நம்பினாலும், நம்பவில்லை என்றாலும் இது உண்மையே. நம் வாசகர்கள் பலருக்கு ராகேஷ் பாபு என்ற நபரை அறிந்திருக்கக் கூடும்.
அவரே டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டை மாடிஃபிகேஷன் வாயிலாக ராயல் என்பீல்டு புல்லட்டை (Royal Enfield Bullet) பைக்கை உருவாக்கியிருக்கின்றார். இவர் சுசுகி சாமுராய் மோட்டார்சைக்கிளின் எஞ்ஜினைக் கொண்டு ஃபோக்ஸ்வேகன் பீட்டில் மாடல் காரை வீட்டிலேயே வைத்து உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த காரின் உருவாக்கத்தின் வாயிலாக புகழ்பெற்ற நபராக மாறினார். வீடியோ வைரலானதை அடுத்து வாகன உலகில் மட்டுமின்றி யுட்யூபிலும் செம்ம ஃபேமஸான நபராக மாறினார். மேலும், இவருக்கு ஃபாலோவர்களும் அதிகரிக்கத் தொடங்கினர். இவர் இந்த வாகனத்தை மட்டுமே உருவாக்கியிருக்கின்றாரா என கேட்டால், இல்லை என்பதே பதில்.
ராகேஷ் பாபு பல விதமான வாகனங்களை இதுவரை வடிவமைத்திருக்கின்றார். சிறுவர்கள் இயக்குகின்ற வகையிலான எலெக்ட்ரிக் ஜீப் மற்றும் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட பல வாகனங்களை அவர் உருவாக்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே ராகேஷ் பாபு டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டைக் கொண்டு ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளை உருவாக்கியிருக்கின்றார். புல்லட் தோற்றத்தை எக்ஸ்எல்100 மொபட்டில் கொண்டு வருவதற்காக பன்முக வேலைகளை ராகேஷ் செய்திருக்கின்றார்.
அந்தவகையில், குறிப்பிட்ட சில பாகங்களை அவர் வெட்டி நீக்கியிருக்கின்றார். நீக்கப்பட்ட பாகங்களுக்கு பதிலாக புல்லட் பைக்கைப் பிரதிபலிக்கக் கூடிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, சேஸிஸின் அமைப்பிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
தொடர்ந்து, எக்ஸ்எல்100-இன் பின் பக்க சஸ்பென்ஷன் நீக்கப்பட்டு, அதன் இடமும் மாற்றப்பட்டிருக்கின்றது. எரிபொருள் தொட்டி நிலை நிறுத்தப்படும் இடமும் மாற்றப்பட்டிருக்கின்றது. மேலும், பழைய எரிபொருள் தொட்டி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஃபைபராலான போலி தொட்டி அங்கு பொருத்தப்பட்டிருக்கின்றது.
இது புல்லட் பைக்கை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதேபோல், இருக்கைகள், ஹெட்லைட், இன்டிகேட்டர் மின் விளக்குகள், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பேட்டரி இருக்கும் பகுதி உள்ளிட்டவையும் புல்லட் பைக்கில் இடம் பெற்றிருப்பதைப் போன்று மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரியான செயல்களின் வாயிலாகவே மினி புல்லட் தற்போது உருவாகியிருக்கின்றது. எஞ்ஜின் விஷயத்திலும் அதிக கவனத்துடன் ராகேஷ் பாபு செயல்பட்டிருக்கின்றார். ஆனால், அது உண்மையான எஞ்ஜின் அல்ல என்று கூறப்படுகின்றது.
வாகனத்தில் காட்சியளிக்கும் எஞ்ஜின் போலியானது. புல்லட் பைக்கின் எஞ்ஜினைப் போன்று அது காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக பைபர் பேனல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான எஞ்ஜினே அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. பிற பாகங்களைப் போல இதுவும் புல்லட்டை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறே பன்முக வேலைகளின் ஊடாகவே மினி புல்லட் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் சற்றே உயரம் குறைவானாதகவும், இலகுவானதாகவும் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் மிக சிறந்த படைப்பாக காட்சியளிக்கின்றது. இதுபோன்று வாகனங்களை மாடிஃபை செய்வது இந்தியாவில் குற்ற செயலாகும். இருப்பினும், ராகேஷ் பாபுவின் இந்த படைப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை என வாகன ஆர்வர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.