ஒலி ராபின்ஸனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு வீரரின் பழைய ட்வீட்டுகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இனவெறியைக் காட்டும் அவரது ட்வீட்டுகளை இங்கிலாந்து ஊடகம் ஒன்று வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பெற்றிருக்கும் ஒலி ராபின்ஸன், ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்தார். நியூஸிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி பாராட்டும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 7-8 வருடங்களுக்கு முன், அவரது பதின்ம வயதில், கருப்பினத்தவர்கள், ஆசிய மக்கள், முஸ்லிம்கள், பெண்கள் எனப் பலதரப்பட்ட மக்களையும் கிண்டல் செய்து அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டுகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. அவரது ட்வீட்டுகளில் காணப்பட்ட இனவெறி, பாலினப் பாகுபாடு ஆகியவற்றைக் காரணம் காட்டி, அவரை ஒட்டுமொத்தமாக எல்லாவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நீக்கித் தடை விதித்தது.
இந்நிலையில் மற்றொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் பழைய ட்வீட்டுகளும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய இன மக்களுக்கு எதிரான இந்த ட்வீட்டால் அந்த வீரரும் தற்போது நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. விஸ்டன் இணையதளம் இந்த ட்வீட்டுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. ஆனால், அந்த கிரிக்கெட் வீரர் யார் என்பது பற்றிச் சொல்லப்படவில்லை.
இது தொடர்பாகப் பேசிய வாரியத்தின் செய்தித் தொடர்பாளர், இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.