2019இல் செல்டோஸ் மூலமாக இந்திய சந்தையில் நுழைந்த கியா நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய விலை குறைவான எம்பிவி காராக கேரன்ஸை விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்திய சந்தைக்கு ஏற்ப, பலத்தரப்பட்ட மக்கள் வாங்கக்கூடியதாக கொண்டுவரப்பட்டதால், கணிசமான முன்பதிவுகளையும், விற்பனை எண்ணிக்கைகளையும் கேரன்ஸ் கடந்த ஒவ்வொரு மாதத்திலும் பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில் உலகளாவிய என்சிஏபி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கியா கேரன்ஸ் ஐந்திற்கு 3 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. இந்த மோதல் சோதனைகளில் கேரன்ஸின் அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. அதாவது கேரன்ஸின் ஆரம்ப நிலை வேரியண்ட்களில் வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் சோதனை மாதிரியில் இருந்தன.
ஆறு காற்றுப்பைகள், சீட்பெல்ட் அணியாததை எச்சரிப்பான், ஏபிஎஸ், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், பிரேக் உதவி அமைப்பு மற்றும் டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்டவை கேரன்ஸின் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களில் அடங்குகின்றன. இத்தனை அம்சங்கள் அடிப்படையானவைகளாக வழங்கப்பட்டு இருப்பினும், இந்த மோதல் சோதனைகளின் முடிவில் இந்த கியா காருக்கு வெறும் 3 நட்சத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
பெரியவர்கள் பாதுகாப்பில் கேரன்ஸ் எம்பிவி கார் 17க்கு 9.30 புள்ளிகளை பெற்றுள்ளது. இதுகுறித்து உலகளாவிய என்சிஏபி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரன்ஸ் காரின் கட்டமைப்பு மற்றும் அடித்தளம் நிலையற்றதாக உள்ளதாகவும், உடற்கூடானது ‘சுமைகளை கூட்டினாலும் தாங்கும் திறன்’-ஐ கொண்டில்லை எனவும் தெரிவித்துள்ளது.
முன் இருக்கைகளில் அமர்த்தப்பட்ட டம்மிகளின் தலை மற்றும் கழுத்து பகுதிக்கான பாதுகாப்பு நல்லப்படியாக குறிப்பிடப்பட்டாலும், ஓட்டுனரின் மார்பு பகுதிக்கான பாதுகாப்பு விளம்பு நிலையிலேயே மதிப்பீட்டை பெற்றுள்ளது. அதேபோல் முன் இருக்கை பயணிகளின் கால் முட்டிக்கான பாதுகாப்பும் சுமார் நிலையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை பொறுத்தவரையில், மொத்த 49 மதிப்பெண்களுக்கு கியா கேரன்ஸ் 30.99 புள்ளிகளை பதிவு செய்துள்ளது. குழந்தைக்களின் பாதுகாப்பிற்காக இந்த எம்பிவி காரில் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான மைய புள்ளிகள் மற்றும் குழந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளை கியா நிறுவனம் வழங்குகிறது. இவை யாவும் மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்ட கேரன்ஸ் காரிலும் இருந்தன.
காருக்கு முன்பக்கமாக பார்க்கப்பட்டவாறு பின் இருக்கையில் அமர்த்தப்பட்ட 3-வயது குழந்தை டம்மிக்கு போதுமான அளவிலான பாதுகாப்பையும், பின்பக்கமாக பார்க்கப்பட்டவாறு அமர்த்தப்பட்ட 1.5-வயது குழந்தைக்கு நல்லப்படியான பாதுகாப்பையும் கேரன்ஸ் வழங்குவதாக சோதனை செய்த அமைப்பு தெரிவித்துள்ளது. கேரன்ஸ் பின் இருக்கை வரிசையின் மத்தியில் லேப் பெல்ட்டை கொண்டுள்ளது. இருப்பினும், மோதல்களின் போது அதன் குறிப்பிட்ட சில முக்கிய புள்ளிகள் அறுப்பட்டுள்ளன.
சோதனை செய்யப்பட்ட கேரன்ஸ் மாதிரி ஆனது முன் மற்றும் பின் இருக்கை வரிசைகளில் இரு பக்கவாட்டுகளிலும் காற்றுப்பைகளை கொண்டிருந்தது. அதேபோல் முன் இருக்கை வரிசை பயணிகளின் தலைகளுக்கும் காற்றுப்பைகள் வழங்கப்பட்டு இருந்தன. இதனால் பக்கவாட்டு மோதல்களில் கேரன்ஸ் போதுமான அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
கேரன்ஸின் இந்த முடிவுகள் குறித்து உலகளாவிய என்சிஏபி-இன் பொது செயலாளர் அலேஜண்ட்ரோ ஃபுராஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த மாடலில் (கியா கேரன்ஸ்) இருந்து சிறந்த செயல்திறனை எதிர்பார்க்கிறோம். பொதுவாக மற்ற சந்தைகளில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெறும் கியா போன்ற உலகளாவிய கார் பிராண்ட்கள் இந்தியாவில் இன்னமும் இந்த அளவை எட்டவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது” என்றார்.
செல்டோஸ் எஸ்யூவி காரின் வடிவமைப்பில் கியா நிறுவனம் பயன்படுத்திய அதே இயக்குத்தளத்தை பயன்படுத்திதான் கேரன்ஸ் எம்பிவி மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2020இல் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்ட செல்டோஸும், கேரன்ஸை போன்று ஐந்திற்கு 3 நட்சத்திரங்களைதான் பெற்றது என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.