டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தோனேஷியா நாட்டு அணியின் நம்பிக்கை நாயகனாக உள்ளார் கெவின் சஞ்சயா சுகாமுயோ.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தோனேஷியா 7 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறது. அந்த ஏழு தங்கப் பதக்கங்களும் பேட்மிண்டன் போட்டியின் மூலம் கிட்டியவை. இந்த முறையும் இந்தோனேஷிய அணி பேட்மிண்டனில் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் பதக்கத்தை எதிர்நோக்கியுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு தரநிலைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கெவினின் ஆட்டம் அந்த அணிக்கு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.
மார்கஸ் ஃபெர்னால்டி கிடியோனுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அவர் பங்கேற்கிறார். உயரம் குறைவாக இருந்தாலும், ஒருங்கிணைந்த துடிப்பான ஆட்டத்தின் காரணமாக, இவ்விருவரும் சர்வதேச பேட்மிண்டன் ரசிகர்களால் மினியன்ஸ் என செல்லப்பெயரிட்டு அழைக்கப்படுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் சஞ்சயா சுகாமுயோ கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் மூன்று சர்வதேச போட்டித்தொடர்களில் இவர்களால் பங்கேற்க முடியாமல் போனது. என்றாலும், தரநிலையில் முதலிடத்தில் இருக்கும் இவர்கள் கீழிறங்கவில்லை. இப்போது, கோவிட் பாதிப்பில் இருந்து சுகாமுயோ மீண்டுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வெல்லும் முனைப்புடன், கிடியோனுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.