டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் டென்னிஸில் இந்தியாவின் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா ஜோடி முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினர்.
டோக்கியோவில் ஒலி்ம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. டென்னிஸில், மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, அங்கிதா ஜோடியை உக்ரைன் வீராங்கனைகள் நாடியா மற்றும் மைலா செனாக் எதிர்கொண்டனர்.
இந்த ஆட்டத்தில் சானியா, அங்கிதா ஜோடியை 0-6, 7-6, 10-8 என்ற கணக்கில் உக்ரைன் ஜோடி நாடியா, செனாக் வெளியேற்றினர்.
மகளிர் ஹாக்கி பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்திலும் இந்திய அணி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 1-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஆடவர் பிரிவில் முதல் சுற்றில் நியூஸிலாந்தை இந்திய அணி வென்ற நிலையில் மகளிர் பிரிவில் தோல்வி அடைந்தது.
மகளிர் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ராணி ராம்பால் 10-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த ஒருகோல் மட்டுமே இந்திய அணி அடித்தது. ஆனால், நெதர்லாந்து அணி வீராங்கனைகள் 5 கோல்களை அடித்து இந்திய அணியை திணறவிட்டனர்.
நெதர்லாந்து தரப்பில் பெலிஸ் அல்பெர்ஸ் 6-வது நிமிடத்திலும்,43-வது நிமிடத்திலும் கோல் அடித்தார். 33-வது நிமிடத்தில் மார்காட் வேன் ஜெபானும், 45-வது நிமிடத்தில் பெரட்ரிக் மாட்லாவும், 52-வது நிமிடத்தில் சியா ஜேக்குலின் மசாக்கரும் கோல் அடித்தனர்.
நாளை நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தி்ல் ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.