சில நாட்களுக்கு முன்னர் ஓர் இணையப் பத்திரிகையில் நலம் தொடர்பான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையில் கண் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு மருத்துவக் குறிப்புகளைக் கட்டுரையாளர் சொல்கிறார். கண் சிவப்பாக மாறினால், அதைக் குணப்படுத்துவதற்குச் சில இயற்கை வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார். அடிப்படைப் புரிதல் இல்லாமல், கண்சிவப்பைக் குணப்படுத்த கற்றாழையை வைத்துக் கண்ணில் கட்டச் சொல்கிறார்.
கண்சிவப்புக்குப் பல காரணங்கள் உள்ளன. சாதாரண கண்வலியிலிருந்து கிளாக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்த உயர்வு நோய் வரையிலான பலவித கண்நோய்களின் வெளிப்பாடாகவும் அது இருக்கக்கூடும்.
மெட்ராஸ் ‘ஐ’ எனப்படும் விழிவெளி இழைமைத் தொற்றிலும் கண்சிவப்பு இருக்கும். இந்தத் தொற்றுக்குத் தகுந்த கண்சொட்டு மருந்தினைப் போட்டுக் குணப்படுத்தலாம். மெட்ராஸ் ‘ஐ’ ஏற்பட்டால், கண்ணை மூடி வைக்கக் கூடாது. மூடி வைத்தால் பிரச்சினை அதிகரித்துவிடும்.
கண்நீர் அழுத்த உயர்விலும் ( கிளாக்கோமா ) கண்சிவப்பு ஏற்படலாம். இதற்கு உடனடியாகத் தகுந்த மருத்துவம் செய்து அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம்.
விழியடிக் கரும்படலத் தொற்றிலும் ( Iritis) கண்ணில் சிவப்பு ஏற்படலாம். தகுந்த சிகிச்சை அவசியம். உலர் கண் பிரச்சினையிலும் கண்சிவப்பு ஏற்படலாம். கணினி பார்வை பிரச்சினையிலும் கண்சிவப்பு ஏற்படுவதுண்டு. நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் கண்ணில் ஏற்படும் சிறு காயங்களினாலும் கூட கண்ணில் சிகப்பு ஏற்படலாம்.
ஆக, எல்லாமே கண்சிவப்புதான். ஆனால் இந்த சிவப்பு எதனால் ஏற்பட்டது என்பதை கண்மருத்துவரால் மட்டுமே பரிசோதித்து அதற்கேற்ப மருத்துவம் செய்ய முடியும்.
கண்ணில் ஏற்படும் சிவப்போ, வேறு எந்தவிதப் பிரச்சினையோ, அவற்றுக்கான காரணத்தைப் பொறுத்துத்தான் தீவிரமான பிரச்சினையா இல்லையா என்பதைச் சொல்லமுடியும். நீங்களாக சுய மருத்துவம் செய்யும்போது சாதாரண கண்சிவப்புகூட பார்வையைக் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது.
> இது, மு.வீராசாமி எழுதிய ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்