பொதுவாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கே காவல்துறையினர் அபராதம் வழங்குவர். அந்தவகையில், மது போதையில் வாகனத்தை இயக்குவது, ஓவர் ஸ்பீடில் செல்வது, சீட் பெல்ட் அணியாதது மற்றும் தலைக்கவசம் போடாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்கே போக்குவரத்துத்துறை காவலர்கள் அபராதம் வழங்குவர். இதுமாதிரியான போக்குவரத்து விதிமீறல்களுக்கே அபராதம் தற்போதும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
அதேவேலையில், சில நேரங்களில் செய்யப்படாத விதிமீறல்களுக்கும்கூட காவலர்கள் அபராதங்களை வழங்கிய சம்பவங்கள் நம் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. உதாரணமாக, காரில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் அணியவில்லை என்றும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சீட் பெல்ட் அணியவில்லை என்றும் தவறுதலாக காவலர்கள் அபராதங்களை வழங்கியிருக்கின்றனர்.
சமீபத்தில் தலைநகர் டெல்லியில்கூட காவலர் ஒருவர் காரில் வந்த நபருக்கு ஹெல்மெட் அணியவில்லை அபராதம் வழங்கினர். தொழில்நுட்ப கோளாறின் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வாவது பரவாயில்லை, இதைவிட கொடுமையான ஓர் அபராத சம்பவம் ஒன்று தற்போது நாட்டில் அரங்கறியிரக்கின்றது என்று கூறுமளவிற்கு, இதுவரை கேள்விப்பட்டிராத மற்றும் முற்றிலும் மாறுபட்ட அபராத சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு, வாகனத்தில் போதியளவு எரிபொருள் இல்லை என கூறி அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த அபராதத்திற்காக போலீஸார் வழங்கிய செலானின் படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த அபராத சம்பவம் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. நம்ம ஊருல பல இருசக்கர வாகன ஓட்டிகள் தற்போதும் 50 ரூபாவுக்கு பெட்ரோல் போடுவதை நாம் பார்த்திருப்போம். இதுபோன்றோருக்கு அபராதம் வழங்க வேண்டும் என்றால் நாட்டில் பல கோடி பேருக்கு ஒவ்வொரு நாளும் அபராதம் விதிக்க வேண்டும்.
தற்போதைய இந்த அபராத சம்பவம் குறிப்பாக கேரளவாசிகள் மத்தியில் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில், கேரளாவிலேயே இந்த விநோத அபராத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. அம்மாநில மோட்டார் வாகனத் துறை (Motor Vehicle Department) அதிகாரிகளினாலேயே ஃப்யூவல் குறைவாக இருப்பதாகக் கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த செல்லாணில் “போதிய எரிபொருள் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் பயணியை ஏற்றி சென்றதற்காக அபராதம் விதிக்கப்படுகின்றது” என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, உண்மையில் இப்படி ஒரு விதி நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது போலீஸாரின் கவனக்குறைவால் இவ்வாறு அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றதா? என்கிற சந்தேகத்தை அனைவரின் மத்தியிலும் எழும்பியிருக்கின்றது.
இதற்கான பதிலையே மலையாள யுட்யூப் சேனல் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. ஓய்வுபெற்ற ஆர்டிஓ அதிகாரி தங்கச்சன் டி.ஜே., வழங்கிய பேட்டியையே அந்த யுட்யூப் சேனல் வீடியோவாக வெளியிட்டிருக்கின்றது. அவர் கூறியிருப்பதாவது, “பெட்ரோல் குறைவாக இருப்பதாகக் கூறி அபராதம் வழங்கப்பட்டிருப்பதை நானே இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகின்றேன். சட்டப்படி இந்த செல்லாண் செல்லாது” என தெரிவித்தார்.
அதேநேரத்தில், ஓய்வுபெற்ற ஆர்டிஓ அதிகாரி, “இதுமாதிரியான விதிகள் வர்த்தக ரீதியாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்” எனவும் கூடுதல் தகவல் தெரிவித்தார். ஆனால், தற்போது இருசக்கர வாகன உரிமையாளருக்கே செல்லாண் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் செல்லாண் சட்டபடி நிற்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணிக வாகனங்கள் பயணிகள் இருக்கும்போது எரிபொருளை நிரப்பக் கூடாது என்கிற விதியும் இருப்பதாக ஒய்வு பெற்ற ஆர்டிஓ அதிகாரி தெரிவித்தார். இதுமாதிரியான அபராதங்களுக்கு ரூ. 250 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஆகையால், இருசக்கர வாகன ஓட்டிக்கு வழங்கப்பட்டிருக்கும் அபராதம் தவறுதலாக வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகின்றது.
குறிப்பு: 5 மற்றும் 6-ஐ தவிர மற்ற அனைத்து படங்களும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.