கார்த்திக் vs பானுப்பிரியா – சந்திக்காமல் ஒரு காதல்
தமிழ் சினிமாவின் ‘க்யூட்டான’ ஹீரோக்களைப் பட்டியலிட்டால் கார்த்திக் அதில் நிச்சயம் இடம்பிடித்து விடுவார். இந்தத் திரைப்படத்தின் பல காட்சிகளில் மிக அழகாகத் தோற்றமளிப்பார். இதைப் போலவே கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. உண்மையும் பொய்யுமான கோபத்துடன் தன் நண்பர்களைக் கடிந்து கொள்வதாகட்டும், பானுப்ரியாவை முதன் முதலில் கண்டு தன்னிச்சையான ஈர்ப்பு கொள்வதாகட்டும், அவர் தன்னைக் காதலிக்கிறார் (?!) என்பதை நண்பர்களின் மூலம் அறிந்து பரவசம் அடைவதாகட்டும், நண்பர்களிடம் விதம் விதமாக ஏமாறுவதாகட்டும், பழைய காதலின் இழப்பை எண்ணி நெகிழ்வதாகட்டும், நண்பர்களின் துரோகத்தை அறியும் போது கதறுவதாகட்டும், அவர்களைப் பழிவாங்கும் காட்சியில் அசாதாரணமான கோபத்தை வெளிப்படுத்துவதாகட்டும்… எனப் பல காட்சிகளில் கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாகப் பிரகாசிக்கும்.
‘தாலாட்டும் பூங்காற்று’ பாடலின் ஓரிடத்தில் காதலின் தவிப்புடன் கார்த்திக் பானுப்ரியாவைப் பார்க்கும் காட்சி ஒன்றுண்டு. தாயிடம் தன்னை தூக்கச் சொல்லி குழந்தை வெளிப்படுத்துவது மாதிரியான அற்புத முகபாவத்தைத் தந்திருப்பார். பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் கார்த்திக்கின் துள்ளல் வேறு மாதிரியாக இருக்கும். அதற்கு எதிர்முனையில் க்ளைமாக்ஸில் இன்னொரு உக்கிரமான கார்த்திக்கைப் பார்க்க முடியும். கல்லூரி பிரின்ஸிபாலான நாகேஷூம் கார்த்திக்கும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ரசிக்கத்தக்கவை. காதலி சொன்னாள் என்பதற்காக மீசையை எடுத்து விட்டு வந்து பஸ் ஸ்டாப்பில் கார்த்திக் அழகு காட்டும் காட்சி வேடிக்கையானது.
இந்தியச் சினிமாவின் பேரழகிகளுள் ஒருவர் பானுப்ரியா என்பதில் சந்தேகமில்லை. ஒரு காலத்தில் அவர் இல்லாமல் துணிக்கடை போஸ்டர்களோ, காலண்டர்களோ இருக்காது. அவற்றில் பரிபூரண லட்சணத்துடன் ஜொலிப்பார். அவருடைய கண்கள் மட்டுமே அத்தனை அழகு. ஆனால் அவர் தனது அழகைக் கூட்டிக் கொள்வதற்காகச் செய்து கொண்ட மூக்கு ஆபரேஷன், அவரது இயல்பான தோற்றத்தைக் குலைத்து விட்டதாகத் தோன்றுகிறது. பானுப்ரியா அழகி மட்டுமல்ல, நடிப்பிலும் சிறந்தவர் என்பதற்கு ‘அழகன்’ முதற்கொண்டு ஏராளமான உதாரணங்கள் உண்டு.
இந்தத் திரைப்படத்தில் பானுப்ரியாவிற்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் தனது பங்களிப்பைச் சிறப்பாகவே தந்திருப்பார். குறிப்பாகப் பாடல் காட்சிகளில் பிரமாதமாகத் தோற்றமளிப்பார். ‘தாலாட்டும் பூங்காற்று’ பாடலில் நம்மைத் தாலாட்டும் தேவதையாகவே உணர வைப்பார்.