பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட் ஏத்தர் எனர்ஜி ஆகும். 450எக்ஸ் என்ற ஒரேயொரு செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே தற்போதைக்கு விற்பனை செய்துவரும் ஏத்தர் நிறுவனத்திற்கு தமிழகத்தில் ஓசூரில் தொழிற்சாலை உள்ளது.
அதேநேரம் நமது சென்னை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த பிராண்டிற்கு சில்லறை விற்பனை மையங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த மே 27ஆம் தேதி சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏத்தர் எனர்ஜியின் டீலர்ஷிப்களில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிய அளவிலான தீ விபத்து தான் என்றாலும், சில ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீயினால் சேதமடைந்துள்ளன.
அதிலிலும் குறிப்பாக ஒரு சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாக மாறியுள்ளன. இருப்பினும் இந்த தீ விபத்தில் எவரொருவருக்கும் எந்த காயமும் இல்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த ஊழியர்கள் ஸ்கூட்டர்களை பத்திரமாக மையத்தில் இருந்து வெளியேற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருந்தாலும் ஒரு சில ஸ்கூட்டர்களை காப்பாற்ற முடியவில்லை. இந்த தீ விபத்து குறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள எங்கள் மையத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சில சொத்துக்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் பாதிக்கப்பட்டாலும், அதிர்ஷ்டவசமாக அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் விஷயங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த மையம விரைவில் செயல்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் தற்போது வரையில் தெரியவரவில்லை. இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. ஏத்தர் எனர்ஜி போன்ற எலக்ட்ரிக் 2-வீலர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தற்சமயம் பிடிக்காத வார்த்தை என்றால் அது தீ ஆகவே இருக்க வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு தீ என்ற வார்த்தை அவர்களை சுற்றி சுற்றி வருகிறது.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பல பிராண்ட்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சாலையிலும், வீடுகளிலும் தீப்பிடித்து வரும் சம்பவங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த சம்பவங்களில் இதுவரையில் மட்டுமே 6 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது மத்திய அரசின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, அனைத்து இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களும் எச்சரிக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சென்னையில் ஏத்தர் எனர்ஜியின் சில்லறை விற்பனை மையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நிச்சயமாக இந்த சம்பவம் இந்த பெங்களூர் நிறுவனத்திற்கு ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை எச்சரித்தது மட்டுமின்றி, மத்திய அரசாங்கம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பிற்கான காரணத்தை அறிய நிபுணத்துவம் பெற்றவர்கள் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விசாரணையை நடத்திவரும் இந்த குழு தனது அறிக்கையை இன்னும் சில வாரங்களில் சமர்பிக்கும் என கூறப்படுகிறது. இதில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பை தவிர்க்கும் விதமாக என்னென்ன நடவடிக்கைகளை தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொள்ளலாம் என்பதையும் இந்த குழு பரிசீலிக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசாங்கம் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கலாம்.
ஓலா, ஒகினவா போன்ற பிராண்ட்களின் தயாரிப்புகள் தீப்பிடிப்பு சம்பவத்திற்கு உள்ளாகினாலும், உண்மையில் ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் அந்த அளவிற்கு பிரச்சனையை தரவில்லை. சந்தையில் நம்பர்.1 இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்பின் உதவியுடன் ஏத்தர் எனர்ஜி செயல்பட்டு வருகிறது. ஸ்வப்னில் ஜெயின் மற்றும் தருண் மெஜ்தா ஆகியோரால் நிறுவப்பட்ட ஏத்தர் எனர்ஜி பிராண்டின் கிட்டத்தட்ட 35% பங்கு ஹீரோவிடம் உள்ளது.