[ad_1]
ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் கார் டிரைவரிடம் இருந்து காவல் துறையினர் 200 ரூபாயை அபராதமாக வசூல் செய்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. காரில் நம்பர் பிளேட் இல்லாத காரணத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சோலாப்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அசாதுதீன் ஓவைசி வந்தபோது அபராதம் விதிக்கப்பட்டதாகவும் காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அசாதுதீன் ஓவைசி இந்திய அளவில் பரவலாக அனைவராலும் அறியப்படும் பிரபலமான அரசியல்வாதியாக உள்ளார். அவர் வந்த காருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் துணிச்சலாக நடவடிக்கை எடுத்த காவல் துறை அதிகாரிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. அவரது நடவடிக்கையை பாராட்டும் வகையில் 5 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. சோலாப்பூரை சேர்ந்த காவல் துறை உயரதிகாரிகள் இந்த பரிசு தொகையை வழங்கியுள்ளனர்.
அசாதுதீன் ஓவைசி சொகுசு எஸ்யூவி ரக காரில் சோலாப்பூருக்கு வந்துள்ளார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்க சென்றுள்ளார். அப்போது உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தன்கிடி அங்கு பணியில் இருந்தார். அசாதுதீன் ஓவைசி வந்த காரின் முன் பகுதியில் நம்பர் பிளேட் இல்லாததை அவர் கவனித்தார்.
இதன் காரணமாக அசாதுதீன் ஓவைசியின் கார் டிரைவரை அபராதம் செலுத்தும்படி ரமேஷ் சிந்தன்கிடி கேட்டு கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தொண்டர்கள் அரசு விருந்தினர் மாளிகைக்கு வெளியே குவிந்து விட்டனர். எனவே காவல் துறை உயரதிகாரிகளும் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.
இதன்பின் அசாதுதீன் ஓவைசி வந்த காரின் டிரைவரிடம் இருந்து 200 ரூபாய் அபராத தொகையை காவல் துறை அதிகாரிகள் வசூல் செய்தனர். பின்னர் ரமேஷ் சிந்தன்கிடியின் நடவடிக்கையை பாராட்டும் வகையில் அவருக்கு காவல் துறை உயரதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாயை பரிசு தொகையாக வழங்கினர். இந்த சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் மிக அதிகளவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் விதிமுறைகளை மீறும் அனைவர் மீதும் காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. குறிப்பாக அரசியல் செல்வாக்கு உடையவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.
நிலைமை இப்படி இருக்கும்போது, நம்பர் பிளேட் இல்லாத காரணத்திற்காக அசாதுதீன் ஓவைசி வந்த காருக்கு காவல் துறை அதிகாரி ரமேஷ் சிந்தன்கிடி அபராதம் விதித்திருப்பது உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒரு விஷயம்தான். தற்போது சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் காவல் துறை அதிகாரி ரமேஷ் சிந்தின்கிடியை பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் பகுதியில் நம்பர் பிளேட் இருப்பது கட்டாயம். விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு நம்பர் பிளேட் பயன்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு சிலர் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
அதேபோல் நம்பர் பிளேட் இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் அந்த விதிமுறைகளும் இங்கே காற்றில் பறக்க விடப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் நம்பர் பிளேட்களை தங்கள் இஷ்டத்திற்கு டிசைன் செய்து கொள்கின்றனர். இத்தகைய வாகனங்களை சாலையில் அதிகளவு பார்க்க முடியும்.
நம்பர் பிளேட்டில் உள்ள எண்களும், எழுத்துக்களும் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகவே இப்படித்தான் இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு நிறைய பேர் நம்பர் பிளேட்களை பல்வேறு டிசைன்களில் ஸ்டைலாக வடிவமைக்கின்றனர். அத்துடன் கட்சி தலைவர், நடிகர், நடிகைகளின் படங்கள், பெயர்களையும் நம்பர் பிளேட்டில் இடம்பெற செய்கின்றனர்.
விதிமுறைகளின்படி பார்த்தால் இது தவறான விஷயம் ஆகும். இத்தகைய வாகனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் காவல் துறையினருக்கு இருக்கிறது. எனவே உங்கள் வாகனத்தில் நம்பர் பிளேட் விதிமுறைகள்படி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒருவேளை விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் உடனே மாற்றி கொள்ளுங்கள்.
[ad_2]
Source link