இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை இழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள பும்ரா, புதன்கிழமை நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஓய்வு பெற்றார். அவரது முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலககோப்பை தொடரை அவர் இழக்க நேரிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் குழு அவரை ஸ்கேன் செய்து, குறைந்தது 6 மாதங்களுக்கு கிரிக்கெட் வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் வட்டாரங்களின்படி, முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பும்ராவின் உடல்நிலை குறித்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20க்கு முன்னதாக, பிசிசிஐ கூறியது, “செவ்வாய்கிழமை இந்தியாவின் பயிற்சி செஸ்ஸனிற்கு பிறகு பும்ரா முதுகுவலியால் புகார் செய்தார். மருத்துவக் குழு அவரை மதிப்பிட்டதில், அவர் முதல் டி20 இல் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது பும்ரா முதுகில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவால் டி20 உலககோப்பையில் இருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.