சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி, எப்படி இருக்கிறது?
“‘கங்கா கெளரி’ படத்திற்குப்பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. சூழலால் பல படங்களைத் தவறவிட்டுவிட்டேன். இடையில் ‘காதலர் தினம்’ படத்தில் நடிக்க சம்மதித்து பட்டிமன்ற நடுவராகவே 11 நாள்கள் நடித்தேன். சின்னி ஜெயந்த்தும் ஹீரோ குணாலும் ‘கல்லூரி காதல் சுகமானதா? சுமையானதா?’ என்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசுவார்கள். ‘சுகமானது’ என்று பேசும் குணாலைப் பார்த்து ஹீரோயின் இன்ஸ்பயர் ஆகி லவ் பண்ற மாதிரி சீன்ஸ் எடுத்தாங்க. நானும் ரொம்ப ஆசையா நடிச்சுக்கொடுத்தேன். படம் ரிலீஸ் ஆனப்போ ரொம்ப ஆசையாப்போய் பார்த்தேன். ஆனா, நான் நடிச்சக் காட்சி ஒண்ணுக்கூட வரலை. என்னைக் கேக்காமலேயே கட் பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம், சினிமான்னா இப்படித்தான் இருக்கும்போலன்னு நினைச்சி, நிறையப் படங்களை தயக்கத்தோட தவிர்த்துட்டேன்.
‘சிவாஜி’ படத்தில் ரஜினி சாருக்கு மாமனாரா நடிக்க முதலில் எனக்குத்தான் வாய்ப்பு வந்துச்சி. அப்போ, ஸ்கூல்ல பிஸியா இருந்ததால அந்த வாய்ப்பைத் தவறவிட்டுட்டேன். இப்படி, சினிமாங்குற நல்ல மீடியாவை ஏன் மிஸ் பண்ணோம்ன்னு நினைத்துக்கொண்டிருக்கும் போதுதான் ‘பன்னிக்குட்டி’ படத்தின் வாய்ப்பு வந்தது. இயக்குநர் அனுசரணின் ‘கிருமி’ எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். அவர் கேட்டவுடனே ஓகே சொல்லிட்டேன். என் திறமையை முழுசா வெளியே கொண்டு வருவார் என்று நம்பிக்கை இருந்தது. அப்படியே கொண்டுவந்துள்ளார். படத்தில் சாமியார் கதாபாத்திரத்தில் வருகிறேன். அடுத்ததாக, கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘ஆலம்பனா’ படத்தில் வைபவுக்கு தாத்தாவாக படம் முழுக்க வருகிறேன். நல்ல வாய்ப்புகள், நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளேன்.”