இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தள்ளிவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 5வது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டபோது கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட ரோகித் ஷர்மாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவுகள் வரவே, போட்டியிலிருந்து அவர் விலக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கபில் தேவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக வழிநடத்தினார் கபில்தேவ். இதையடுத்து 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் அணியை வழிநடத்தும் சூழல் உருவாகியுள்ளது. பும்ரா 29 டெஸ்ட் போட்டிகளில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்துள்ளார்.
“இது மிகப் பெரிய கவுரவம். இது மிகப் பெரிய சாதனை. எம்எஸ் தோனி என்னிடம் கூறினார், தான் நேரடியாக இந்திய கேப்டனாக பொறுப்பேற்றதாக கூறினார். அதற்கு முன் வேறு எங்கும் கேப்டனாக இருந்ததில்லை என்றும் தெரிவித்தார். அவர் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். அணிக்கு எப்படி உதவுவது என்பதில் கவனம் செலுத்துகிறேன்.” என்று கூறினார் பும்ரா. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டால் வெட்கப்பட மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் அந்த கேப்டன் பதவி இவ்வளவு விரைவில் வந்துசேருமென்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source link
puthiyathalaimurai.com
Web Team