இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்றது. பல பட்டதாரி இளைஞர்கள் படித்த படிப்பிற்கு வேலைக் கிடைக்காததால் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்களாக மாறியிருக்கின்றனர். சிலர் சுய தொழில் ஆரம்பிக்கும் விதமாக சொந்தமாக காரை வாங்கி கால் டாக்சி டிரைவராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலில் கால் டாக்சி பணியில் ஈடுபடுவோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஓர் தகவலை குறிப்பிட்ட மாநில அரசு ஒன்று வெளியிட்டிருக்கின்றது. கால் டாக்சி பிரிவில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனமாக மாற்றுவதற்கான புதிய கொள்கை பற்றிய அறிவிப்பையே மாநில அரசு வெளியிட்டுள்ளது. டெல்லி அரசாங்கமே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக மாநிலத்தில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. பொதுமக்கள் மூச்சுவிடுவதற்கே சிரமப்படும் அளவிற்கு அங்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் வாகனங்களே இயங்கக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாட்டை விதிக்கும் அளவிற்கு டெல்லியில் காற்று மாசு பன்மடங்கு உயர்ந்திருக்கின்றது.
இத்தகைய சூழலின் காரணமாகவே டாக்சி மற்றும் பிற பொதுப் போக்குவரத்து சேவையில் மின்சார வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, தற்போது கால் டாக்சி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களை இந்த அறிவிப்பு சற்றே கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
அரசின் இந்த விதி 1 ஏப்ரல் 2030 அன்று அமல்படுத்தப்பட இருக்கின்றது. இதனை அமல்படுத்துவதில் அம்மாநில அரசு தீவிரமாக உள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறும் கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விதி டெலிவரி சேவையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கால் டாக்சி கார்கள், டெலிவரி ஆட்டோ மற்றும் டூ-வீலர் ஆகியவற்றிற்கும் இந்த விதி பொருந்தும். ஆகையால், டெலிவரி சேவையில் ஈடுபட்டு வருபவர்களையும் டெல்லி அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியடைச் செய்துள்ளது. முதலில் கால் டாக்சி மற்றும் டெலிவரி சேவையில் ஈடுபடுபவர்களை மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற்றும் விதமாக இந்த அறிவிப்பை டெல்லி அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
‘டெல்லி மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு திட்டம்’ என்கிற தலைப்பின்கீழ் இந்த புதிய கொள்கையை டெல்லி போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, குறைவான ஸ்டார் ரேட்டிங்கைப் பெறும் பார்ட்னர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த விதியில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டெலிவரி பாய் அல்லது கால் டாக்சி டிரைவர் மீது எழும் புகார்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அந்த விதி கூறுகின்றது.
குறிப்பாக, 3.5க்கும் குறைவான ஸ்டார் ரேட்டிங்கைப் பெறும் ஓட்டுநர்கள் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க இந்த விதி முன் மொழிந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையை நிறுவனங்கள் வெளியிட வேண்டும் எனவும் புதிய விதி கூறுகின்றது. ஆகையால், ஓட்டுநர்கள் இனி எக்ஸ்ட்ரா கட்டணம், தேவையற்ற பேச்சுக்களை பேசி யாரிடமும் வாலாட்ட முடியாது என்பது தெரிகின்றது.
டெல்லி அரசின் இந்த மாதிரியான நடவடிக்கையால் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் மட்டுமின்றி மாநில மக்களின் நலனிலும் அது அதிக அக்கறைத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. சமீபத்தில் ஓடிபி தெரிவிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் ஐடி ஊழியர் உயிரிழப்பில் முடிவடைந்தது. தமிழகத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமாதிரியான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டே டெல்லி அரசு இந்த சூப்பரான புதிய விதியை உருவாக்கியிருக்கின்றது.