2019-20 நிதியாண்டில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 19.98 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 15.83 ஆகவும் வசூலிக்கப்பட்டது. இதனை அப்படியே இரு மடங்காக 2020-2021ம் நிதியாண்டில் ஒன்றிய அரசு உயர்த்தியது. இதனால், 2020ம் ஆண்டில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 32.98 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 31.83 ஆகவும் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய அதிகப்படியான வரி விதிப்பால் மத்திய அரசுக்கு எரிபொருளின் வாயிலாக கிடைக்கும் லாபம் இரு மடங்காக தற்போது அதிகரித்திருக்கின்றது. 2020-2021ம் நிதியாண்டில் 3 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கின்றது. ஏப்ரல் 2020 தொடங்கி மார்ச் 2021 வரையில் கிடைக்கப்பட்ட வருமானத்தின் மதிப்பே இதுவாகும்.
கடந்த 2019-2020ம் நிதியாண்டில் 1 லட்சத்து 78 ஆயிரம் மட்டுமே வருமானம் கிடைத்திருக்கின்றது. இதைக் காட்டிலும் 2020-21 நிதியாண்டில் கிடைத்திருப்பது இரு மடங்கு அதிக வருமானம் ஆகும். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது இதுகுறித்த தகவலை நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்டார்.
2017ம் நிதியாண்டில் ரூ. 2.22 லட்சமும், நிதியாண்டு 2018 இல் 2.25 லட்சமும், நிதியாண்டு 2019 இல் ரூ. 2.13 லட்சமும் அரசுக்கு வருமானம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. 2020-21 நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட கலால் வரியில் இருந்து மாநில அரசுகளுக்கு இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ. 19,972 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் இணை அமைச்சர் கூறியுள்ளார்.
மாநிலங்களுக்கு இவ்வளவு குறைவான தொகை வழங்க, அடிப்படை கலால் வரியில் இருந்து ஒரு பங்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதே காரணமாகும். இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 1.40ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 1.80ம் வழங்கப்படுகின்றது.
ஒன்றிய அரசு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் அடிப்படை கலால் வரிக்கு மேலாக சில சிறப்பு வரிகளை விதித்து வருகின்றது. கூடுதல் சிறப்பு கலால் வரியாக ரூ. 11ம், சாலை மற்றும் உள் கட்டமைப்பு செஸ்ஸாக ரூ. 13ம் மற்றும் ரூ. 2.50 விவசாய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக வசூலிக்கப்படுகின்றது.
இதேபோல், டீசலுக்கும் சிறப்பு கூடுதல் கலால் வரி வசூலிக்கப்படுகின்றது. ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 8 கூடுதல் சிறப்பு கலால் வரியாகவும், 4 ரூபாய் சாலை மற்றும் உள் கட்டமைப்பு செஸ்ஸாகவும், விவசாய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக மற்றுமொரு நான்கு ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது.
மேலே பார்த்தது அனைத்தும் ஒன்றிய அரசு அதன் பங்காக எரிபொருளுக்கு வசூலிக்கும் வரி பற்றிய விபரம் ஆகும். இதேபோல் மாநில அரசுகளும் அதன் பங்காக வாட் வரியை ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கின்றது. அண்மையில், ஒன்றிய அரசு பெட்ரோலின் விலையில் ரூ. 5ம், டீசல் விலையில் ரூ. 10ம் குறைத்தது.
நவம்பர் 5 முதல் விலை குறைப்பு செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றது. இவ்விலை குறைப்பினால் ஒன்றிய அரசு வசூலிக்கும் கலால் வரி கணிசமாக குறைந்திருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 27.90ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 21.80 ஆகவும் வரிகள் குறைந்திருக்கின்றன.
கலால் வரி லேசாகக் குறைக்கப்பட்ட நிலையிலும் பெட்ரோல், டீசலின் விலை பல மடங்கு அதிகமாக காட்சியளிக்கின்றன. தற்போதும் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 100க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இது ஏழை, எளிய மற்றும் தினசரி வாகன பயன்பாட்டாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருவதனால் மக்கள் மாற்று திறன் கொண்ட வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். சிஎன்ஜி, மின்சார வாகனம் மற்றும் ஹைபிரிட் ரக வாகனங்களை தேர்வு செய்ய தொடங்கியிருக்கின்றனர். இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் இந்தியாவில் மின் வாகன விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையை உணர்ந்து மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் புது புது எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் களமிறக்கத் தொடங்கியிருக்கின்றன.