நடிகர், நடிகையர் குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்களை விஷ்ணு மஞ்சு எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்ற தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்புக்கான தேர்தலில் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணி தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் நேற்று (அக் 26) மா அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு உறுப்பினர்கள், தொடர்ந்து தெலுங்கு நடிகர், நடிகையர் குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இறுதியாக இதுகுறித்துப் பேசிய மா அமைப்பின் தலைவரான விஷ்ணு மஞ்சு கூறியதாவது:
”தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறு பரப்புவதும், வதந்திகளை உருவாக்குவதும், நடிகர்களின் புகழைக் கெடுப்பதும் நல்ல விஷயங்கள் அல்ல. உண்மையைக் கூறி, ஆரோக்கியமான கருத்துகளைப் பகிர்ந்தால் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சில யூடியூப் சேனல்கள் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்காக சில நடிகர்களை குறிவைத்துத் தாக்குவது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதுபோன்ற சேனல்கள் எல்லை மீறிச் சென்றால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிவரும்”.
இவ்வாறு விஷ்ணு மஞ்சு கூறியுள்ளார்.