[ad_1]
ரிஷப் பன்ட் ஆட்டம் எதிரணிக்கு ஆபத்தானது எனவும் அவரை தடுத்து நிறுத்துவது கடினமானது என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் ஜார்ஜென்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு பயணம் செய்து அந்நாட்டுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. மேலும் ஜூன் 18 ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து டெலிகிராப் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள ஷேன் ஜார்ஜென்சன் “ரிஷப் பன்ட் ஒரு ஆபத்தான ஆட்டக்காரர். எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறன் படைத்த பேட்ஸ்மேன். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதை நாங்கள் அறிவோம். எனவே ரிஷப் பன்ட்டின் விக்கெட் நியூசிலாந்து பவுலர்களுக்கு முக்கியமானது” என்றார்.
மேலும் பேசிய அவர் “நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்துவீச வேண்டும். ரிஷப் பன்ட் விரைவாக ரன்களை சேர்ப்பதை தடுக்க வேண்டும். ஆனால் அது கடினமான காரியம். அதேவேளையில் இந்தியாவின் பவுலிங்கும் வலுவானதாகவே இருக்கிறது. இந்திய அணியில் பும்ரா, ஷர்துல், சிராஜ் ஆகியோர் ஏற்கெனவே நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். எனவே இந்தப் போட்டி கடினமானதாகவே இருக்கும்” என்றார் ஷேன் ஜார்ஜென்சன்.
[ad_2]
Source link