வடா செய்வதற்குத் தேவையானவை:
உருளைக்கிழங்கு – 3 (தோலுரித்து, வேகவைத்து மசித்துக்கொள்ளவும்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் – 3 அல்லது 4
கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – ஓர் அங்குலத் துண்டு (துருவிக்கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
மேல் மாவுக்குத் தேவையானவை:
கடலை மாவு – முக்கால் கப்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1/3 கப்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
பூண்டுச்சட்னி செய்யத் தேவையானவை:
பூண்டு – இரண்டு டேபிள்ஸ்பூன்
கொப்பறை தேங்காய் துருவியது – அரை கப்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பரிமாறுவதற்கு:
எண்ணெயில் பொரித்த பச்சை மிளகாய் – 6
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சித்துருவல் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி பின்னர் கொத்தமல்லி தூவி இறக்கவும். கலவை ஆறியதும் இதை சிறிய தக்காளி அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். தயாரித்துவைத்திருக்கும் உருண்டைகளை இந்த மாவில் தோய்த்து அதிகம் சிவக்காமல் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்து எடுத்து வைக்கவும். வடா ரெடி.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பூண்டைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதில் தேங்காய் சேர்த்துக் கிளறவும். இத்துடன் பூண்டுச்சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். காற்றுபுகா டப்பாவில் சேகரித்து, தேவைகேற்ப பயன் படுத்தவும்.
வடா பாவைப் பரிமாறும் விதம்
பாவை இரண்டாக பிளந்து, நடுவில் சிறிது பூண்டுச்சட்னி தடவவும். வடாவை லேசாக அழுத்தி இதை பாவுக்கு நடுவில் வைக்கவும். இத்துடன் ஒரு பொரித்த பச்சை மிளகாயையும் வைக்கவும். சூடாகப் பரிமாறவும்.