[ad_1]
கெயில் 13 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆறாவது ஓவரிலேயே அடியெடுத்து வைத்தார் டிவில்லியர்ஸ். தான் சந்தித்த இரண்டாம் பந்தையே சிக்சருக்கு அனுப்பி ரன் கணக்கை துவங்கினார். அவர் ஆரம்பித்த முறையைப் பார்த்து “உடம்ப இரும்பாக்கிக்கடா கிரிகாலா” என்று பந்துவீச்சாளர்கள் மனதில் நிச்சயம் நினைத்திருக்கக் கூடும். காரணம் அதன் பின்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த சரமாரி தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஸ்பின்னர்களை வைத்து டிவில்லியர்ஸை அவுட் ஆக்கி விடலாம் என கணக்குப் போட்டிருந்தார் மெக்கலம். ஆனால் டிவில்லியர்ஸ் ஸ்பின்னர்களிடம் சந்தித்த முதல் ஆறு பந்திலேயே ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்கள் என அமர்க்களப்படுத்தினார்.
சற்று மெதுவாக ஆடும் ஸ்பின்னர்களையே அப்படி அடித்தால், வேகப்பந்து வீச்சாளர்களின் நிலமை? இந்த கேள்வி மெக்கலமிற்கு தோன்றும் முன்னரே குல்கர்னியின் ஓவரை 22 ரன்களுக்கு பறக்க விட்டார் டிவில்லியர்ஸ். ஸ்வீப், கவர் டிரைவ், back foot சிக்சர் போன்ற அக்மார்க் கிரிக்கெட் ஷாட்டுகளுடன் சேர்த்து டிவில்லியர்ஸின் டிரேட் மார்க் 360 டிகிரி ஷாட்டுகளும் இணைய, ரன்கள் எகிறிக் கொண்டே போனது. 25 பந்துகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ் அடுத்த 18 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். ஷிவில் கவுசிக், பிரவீன் தாம்பே, பிரவீன் குமார் போன்ற பந்து வீச்சாளர்கள் எல்லாம் கனவில் கூட அடுத்து இவருக்கு பந்து வீச நினைக்காத அளவுக்கான அடி.
ஒரு பக்கம் திரை தீ பிடிக்கும் என்று பீஸ்ட் மோடில் ஆடிக்கொண்டு இருந்தார் டிவில்லியர்ஸ். மறுபுறம் அமைதியின் மறு உருவமாக தனது நண்பரை ஆட விட்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தார் கோலி. 39 பந்துகளில் தான் தனது அரை சதத்தையே அடித்தார் கோலி. ஏற்கனவே அந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்திருந்தார். சரி கோலியையாவது அடிக்க விடாமல் தடுத்து விட்டோமே என்று நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் அந்த மூச்சை மொத்தமாக நிறுத்த வந்தார் கோலி. 18வது ஓவர் முடிவில் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்தார் கோலி. இதற்கு மேல் ஆவதற்கு என்ன இருக்கிறது என்று 19வது ஓவரை ஷிவில் கவுசிக்கிடம் மெக்கலம் கொடுக்க, அதுவரை பதுங்கி இருந்த கோலி என்னும் புலி நான்கு கால் பாய்ச்சலில் அந்த பாவப்பட்ட ஸ்பின் பவுலரை தாக்கியது.
[ad_2]
Source link
sports.vikatan.com
வில்சன்