ராயல் லண்டன் ஒருநாள் தொடர் கோப்பையில் பங்குபெற்று விளையாடிய புஜாரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 624 ரன்கள் குவித்தார். அந்தத் தொடரில் தனது சிறப்பான அதிரடி பேட்டிங்கிற்கு சிஎஸ்கே தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பையில் இந்திய டெஸ்ட் போட்டியின் மூத்த வீரர் சட்டீஸ்வர் புஜாரா தனது அதிரடி பேட்டிங் மூலம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கினார். டெஸ்ட் போட்டிகளில் நிலைத்து நின்று ஆடுவதற்கே பெயர் போன புஜாரா, அந்த தொடரில் குறைவான பந்துகளில் வேகமான சதங்களை அடித்தார். 9 போட்டிகளில் 624 ரன்களைக் குவித்து, இதுவரை கண்டிராத ஸ்டிரைக் ரேட்டில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார்.
தனது அதிரடி ஆட்டத்தை பற்றி பேசியிருக்கும் புஜாரா, “இது நிச்சயமாக எனது ஆட்டத்தின் வித்தியாசமான பக்கம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. விளையாடிய பிட்சுகள் நன்றாக இருந்தன, அந்த மாதிரியான ஆடுகளங்களில் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. அதற்காக நான் எப்பொழுதும் உழைத்திருக்கிறேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நான் CSK அணியில் இடம்பெற்றிருந்தேன், ஆனால் நான் எந்த போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை. அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சிஎஸ்கே அணி வீரர்கள் போட்டிக்கு தயாராகும் முறையை கவனித்தேன். அப்போது ஒரு முடிவு செய்தேன். அது எனது ஒய்ட் பால் கிரிக்கெட்டில் புதுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் சில ஷாட்களில் பயிற்சி மேற்கொண்டேன். அதனை சிறப்பாக விளையாடுவதாக நண்பர் ஒருவர் ஊக்கம் கொடுத்தார். பயிற்சியில் செய்ததை களத்திலும் செய்தேன்” என்று தெரிவித்தார்.
நடந்து முடிந்த கவுண்டி தொடருக்கு முன்னதாக, புஜாரா இந்திய அணியின் டெஸ்ட் தரப்பில் இருந்து நீக்கப்பட்டார் மற்றும் மீண்டும் இழந்த ஃபார்மை பெற உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்குபெற்று விளையாட அறிவுறுத்தப்பட்டார். அந்த நிலையில் தான் புஜாரா, கவுண்டி லீக் விளையாட இங்கிலாந்து சென்றார், அங்கு முகமது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி போன்றவர்களுடன் விளையாடி தனது ஃபார்மை மீட்டெடுத்தார்.
அந்த தொடரில் 3 சதம் மற்றும் இரண்டு அரை சதம் பதிவு செய்த சட்டீஸ்வர் புஜாரா, 9 போட்டிகளில் 624 ரன்கள் அடித்து அசத்தினார்.