Home சினிமா செய்திகள் AKS – 72: காதலில் வெற்றி, தோல்வி என்றெல்லாம் இருக்கிறதா? திருமணம்தான் வெற்றியின் அடையாளமா?

AKS – 72: காதலில் வெற்றி, தோல்வி என்றெல்லாம் இருக்கிறதா? திருமணம்தான் வெற்றியின் அடையாளமா?

0
AKS – 72: காதலில் வெற்றி, தோல்வி என்றெல்லாம் இருக்கிறதா? திருமணம்தான் வெற்றியின் அடையாளமா?

[ad_1]

காயத்ரியும் சிவாவும் காதலிக்கும் விசயத்தை புனிதா சுந்தரிடம் சொல்கிறாள். சுந்தர் அதைக் கேட்டு அதிர்ச்சியும், கோபமும் கொள்கிறான். காயத்ரியை தவிர இன்னொரு பெண்ணை நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, சிவாவிற்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டுச் செல்கிறான். தனது அறைக்கு வரும் சுந்தர் காயத்ரியை நினைத்து அழுகிறான். காயத்ரியின் படத்தை வைத்துக் கொண்டு இதற்கு முன்பு காயத்ரியை பற்றி அதே அறையிலிருந்து கனவு கண்டதையெல்லாம் நினைத்துப் பார்த்து அழுகிறான்.

தன்னைப் போல் யாரும் காயத்ரியை நேசிக்க முடியாது என்று சுந்தர் சொல்கிறான். ஒருவரை நேசிப்பது என்றால் என்ன? எந்நேரமும் அவர்களைப் பற்றி யோசிப்பது, கனவு கண்டு கொண்டிருப்பது மட்டும் தான் உண்மையான நேசமா?

AKS72

காதல் என்றில்லை. நட்பு அல்லது வேறு எந்த உறவாக இருந்தாலும் உடன் இருப்பவர்களின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும். அவர்களின் விருப்பத்தையும் காது கொடுத்து கேட்க வேண்டும். குறைந்தபட்ச உரையாடல் உறவுகளுக்கிடையே சாத்தியப்பட வேண்டும். சுந்தர் காயத்ரியிடம் உரையாடவில்லை. தான் மட்டும் பேசிக்கொண்டே இருந்தான். தான் சொல்வதை காயத்ரி கேட்டு நடந்தால் போதும் என்ற அளவில் தான் சுந்தருக்கு காயத்ரியின் மீதான காதல் இருந்தது.

சுந்தர் தான் புதிதாக தொடங்க இருக்கும் நகைக் கடையை காயத்ரியின் கையால் திறந்து வைத்து அவளை முதலாளியாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டதாக சுந்தர் சொல்லி அழுகிறான். காயத்ரியும், புனிதாவும் சுந்தரிடம் இருக்கும் பிரச்னைகள் என்னவென்று விளக்கமாக சொல்கின்றார்கள். கண்டிப்பாக ஒரே நாளில் சுந்தருக்கு எல்லாமும் புரிந்து விடாதுதான். அதை விட முக்கியமாக காயத்ரி வேறு ஒருவரை காதலிக்கிறாள் என்பது சுந்தருக்கு மிகப் பெரிய ஏமாற்றமும், கோபமும் உண்டாக்கும் விசயம். அப்படி இருக்கையில் காயத்ரியின் பக்கம் இருக்கும் நியாயமோ, சுந்தர் செய்த தவறோ மற்றவர்கள் சொன்னவுடன் புரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும், மனநிலையிலும் சுந்தர் தற்போது இல்லை.

AKS72

சுந்தர் தன் அறையில் வந்து நகைக்கடையைப் பற்றி பேசி அழுவதைப் பார்க்கும் போது, அங்கே காயத்ரி சுந்தரிடம் தான் இந்த காரணத்தினால் அவனை விட்டு விலக நேர்ந்தது என்று சொன்னது எதுவுமே சுந்தருக்கு துளியும் புரியவில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. சுந்தர் தான் ஐந்து ஆண்டுகள் காதலித்ததாகவும் வெறும் இரண்டு மாதங்கள் காதலித்த ஒருவரின் முன் தன்னுடைய காதல் தோற்று விட்டதை தான் தாங்க முடியவில்லை என்று சொல்லி அழுகிறான்.

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கமல் கமாலினி முகர்ஜியிடம் தனக்கு அவரைக் கண்ட இரண்டே நிமிடத்தில் காதல் வந்துவிட்டது என்று சொல்வார். இது சினிமாவுக்கான வசனமாக இருந்தாலும் உண்மையில் இரண்டு நிமிடத்திலேயே காதல் வந்து திருமணம் செய்து கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதே போல் நண்பர்களாக 20-25 ஆண்டுகள் பழகிய பாண்டியனுக்கும் கவிதாவுக்கும் இத்தனை ஆண்டுகள் கழித்து காதல் வந்திருப்பதும் சாத்தியம்தான். காதலில் ஐந்து ஆண்டுகள் அல்லது இரண்டு மாதங்கள் எது பெரியது என்கிற கணக்கே கிடையாது. அதுபோக சுந்தர் தோற்று விட்டது பற்றி பேசுகிறான். காதலில் இரண்டே விசயங்கள்தான். காதலை உணர்வது. அல்லது உணர்ந்தது ஒருநாள் இல்லாமல் போவது. காதலைப் பரிட்சை போல நினைத்துக் கொண்டு பலரும் காதலில் தோல்வி என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். சுந்தர் காயத்ரியை பிரிய நேர்ந்தாலும் நிச்சயமாக அவனால் காயத்ரியை மறக்க முடியாது என்று சொல்கிறான். அப்படி இருக்கையில் அவனுடைய காதல் அவனது மனதில் தான் இருக்கின்றது. காதலின் முடிவு அல்லது காதலின் வெற்றி என்பது நிச்சயமாக திருமணம் இல்லை. வெற்றி தோல்வி பற்றிப் பேசக் காதல் தேர்வும் இல்லை.

AKS72

இந்த புரிதல் இல்லாததால் தான் விரும்பும் பெண் தன்னை காதலிக்கவில்லை என்றால் தன்னைத் தானே அழித்துக் கொள்வது அல்லது அந்தப் பெண்ணை அழிக்க முயற்சி செய்வது போன்ற வன்முறையில் இறங்கும் செயல்கள் நடக்கின்றன.

சுந்தரும் கூட தான் தோற்று விட்டதாக நினைத்துக் கொண்டு கத்தியால் கையை கிழித்து தற்கொலைக்கு முயல்கிறான். ஒரு 2k கிட் இப்படி செய்வது ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருக்கின்றது. காதலித்தவரை கைப்பிடிக்க முடியவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளும் கடைசித் தலைமுறை 70s கிட்ஸாக இருந்தார்கள் என்று சொல்லலாம். காதலை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் 80s கிட்ஸ்கூட தற்கொலை வரை செல்வது குறைந்துவிட்டது.

காயத்ரி தன்னை நேசிக்க வில்லை என சுந்தர் தற்கொலைக்கு முயன்றது அவன் எவ்வளவு தூரம் பழமையிலும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிப் போய் இருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. காயத்ரி சுந்தரால் தனக்கு ஏதும் பிரச்னை வரும் என்று பயப்படுகிறாள். ஆனால் புனிதா அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று சொல்லி சுந்தர் பிரச்னை செய்ய மாட்டேன் என்று உறுதி கூறியதை நினைவூட்டுகிறாள். ஆனால் காயத்ரி சொல்வதைப்போல சுந்தர் தன்னுடைய எதிர்ப்பை நேரடியாக காட்டக் கூடியவன் இல்லை.

AKS72

காயத்ரி சிவாவை நேசிக்கிறாள் என்று சந்தேகம் வந்தும் கூட சுந்தர் காயத்ரியிடம் அதைக் கேட்காமல், அதே சமயம் அவளை பிரிந்து செல்லாமல் அவள் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். இப்போதும்கூட சுந்தர் காயத்ரியுடன் சேர இது போன்ற காரியங்கள் ஏதாவது செய்யலாம் என காயத்ரி அஞ்சுகிறாள். சுந்தருக்கு தான் நினைத்தது கிடைக்க வேண்டும் என்கிற பிடிவாதம் இருக்கின்றது. அதனால் தான் காயத்ரியை பெண் கேட்டு சென்றபோது அவள் அவ்வளவு தூரம் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று சொன்ன பின்பும் கூட எல்லா வழியிலும் அவளை கன்வின்ஸ் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறான். சுந்தரின் தற்கொலையும் கூட சோகத்தில் எடுத்த முடிவாக இருந்தாலும் ஒருவகையில் அதுவும் Attention Seekingஆக இருக்கலாம் என சந்தேகிக்க வைக்கிறது. இதற்கு பிறகும் காயத்ரி தன்னை நேசிப்பாள் என்கின்ற நம்பிக்கையில் கூட சுந்தர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

AKS72

பரத் வீட்டுக்கு வருகிறான். அவன் வங்கி மேலாளரிடம் வங்கிக் கடனை ரத்து செய்ய சொன்னதைப் பற்றி புனிதா கேட்கிறாள். பரத் இனிமேல் தனக்கு புனிதாவின் உதவி தேவை இல்லை என்றும் தன்னுடைய வாழ்க்கையை தானே பார்த்துக் கொள்வதாகவும் சொல்கிறான். பரத்துக்கு இவ்வளவு காலமாக புனிதா பொருளாதார ரீதியாக உதவி செய்ததோடு மனரீதியாகவும் அவனுக்கு தேவைப்பட்ட நேரத்தில் ஆறுதலாக இருந்திருக்கிறாள். பரத்துக்கு புனிதா மற்றும் கிஷோரின் மீது சந்தேகம் இருக்கிறது. அதை முழுவதும் தெரிந்து புரிந்துகொள்ள தயாராக இல்லாவிட்டாலும் புனிதாவுக்கும் தனக்கும் இடையில் ஏற்கனவே இருந்த உறவிற்கு மரியாதை கொடுத்து புனிதா செய்தவற்றை நினைத்து பார்த்திருக்க வேண்டும். அல்லது தனக்கு பிடிக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் நாகரீகமாக வெளியேறலாம்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே சுந்தர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக காயத்ரிக்கு கால் வருகிறது. உயிர் பிழைத்துக் கொள்ளும் சுந்தரை காயத்ரி எப்படி எதிர்கொள்வாள்?

காத்திருப்போம்!

[ad_2]

Source link

cinema.vikatan.com

வித்யா.மு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here