சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே உலகத்தின் அத்தனை செஸ் வீரர்களின் கவனமும் தமிழ்நாட்டின் பக்கம் வந்தது. எதிர்பார்த்ததைவிடவும் கோலாகலமாக கடந்த 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கியது செஸ் ஒலிம்பியாட் திருவிழா. அதற்கு அடுத்த நாளில் இருந்து போட்டிகள் தொடங்கி நடந்து வந்த நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கின. இந்திய அணிகளில் குறைந்தது ஒரு அணியாவது பதக்கம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.
இதில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்று அனைவரும் வியக்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடர்பான வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க பணிகள் தொடங்கி செய்யப்பட்ட பல்வேறு ஏற்பாடுகள் வரை அனைத்து தகவல்களும் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டன. இந்த வீடியோவின் இறுதியில் செஸ் ஒலிம்பியாட் நாயகன் “தம்பி” அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரியாவிடை கொடுத்தார்.
இதுமட்டுமல்லாமல், இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர்.
குறிப்பாக, ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடல் இந்த நான்கு கருவிகளில் இருந்து இசைக்கப்பட்டது பார்வையாளர்களை கவர்ந்தது.இசையின் நடுவே டிரம்ஸ் மணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வந்து வாசித்தார். அப்போது, திடீரென முதல்வரும் டிரம்ஸ் ஸ்டிக்குகளை வாங்கி வாசித்த போது அரங்கம் அதிர்ந்தது.தொடக்கத்திலேயே முதல்வர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதாவது, வழக்கமாக வரும் பாரம்பரிய வேட்டி, சட்டையில் வராமல், நிறைவு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு உடையில் வந்து அசத்தினார்.
விழாவின் இடையே, கமல்ஹாசனின் குரலில் அரங்கேறிய தமிழ் மண்ணின் வரலாற்றுக் கதை, பார்வையாளர்கள் அனைவருக்கும் மயிற்கூச்செரிய வைத்தது. அசத்தலான கமலின் குரலில், நாடகங்களும், நடிப்பும் என கலைஞர் அசத்தினர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கனியன் பூங்குன்றனாரின் வரிகளோடு உரையைத் தொடங்கிய அவர், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்த சதுரங்க போட்டியால் தமிழகத்தின் புகழ் இந்தியாவின் புகழ் உலகமே மெச்சும் என முன்னரே தெரிவித்ததாகவும், அதற்கேற்றார் போல் பல வீரர்கள் சமூக ஊடகங்களில் தமிழக அரசின் ஏற்பாட்டை வாழ்த்தி பதிவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதக்கங்களை வழங்கினார். இறுதியாக, தேசிய கீதத்துடன் செஸ் ஒலிம்பியாட் 2022 நிறைவு விழா கோலாகலமாக முடிவடைந்தது.
மேலும் படிக்க | செஸ் ஒலிம்பியாட் – குரல் கொடுத்த ஆண்டவர் கமல் பூரித்துப்போன அரங்கம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
Source link
zeenews.india.com
Zee News Tamil