பஞ்சாப்பின் சந்தீப் சர்மா நியூபாலை கையில் எடுக்க, சாஹாவும், கில்லும் குஜராத்துக்காகக் களமிறங்கினர். சாஹா முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, கில் அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள், மீண்டும் சாஹா ஒரு பவுண்டரி என மெல்ல கியரைப் போட்டு வண்டியை நகர்த்த, ரிஷி தவான் ஃப்ரண்ட் டயரின் காற்றைப் பிடுங்கினார். கில் அடித்த பந்தை அவர் பிடிக்க, பேட்டர்கள் இருவரும் ரன் ஓட எத்தனிக்க, ஒரு ஸ்டம்ப்பே கண்ணுக்குத் தெரிந்தாலும் கில்லியாக மாறி அதைத் துல்லியமாக அடித்தார் தவான். ஸ்டம்ப்பின் லைட்கள் பளீரென எறிய, கில் தன் பாதையில் சந்தீப் சர்மா வந்துவிட்டதாகக் கோபித்துக் கொண்டார். ஆனால், அது வேண்டுமென நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. கில் ரன் அவுட்!
கில் சென்றதும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என ஆசைக்கு அடித்துவிட்டு, 21 ரன்களில் ரபாடா ஓவரில் மயங்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சாஹா. ரபாடாவுக்குக் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ் சாஹாவின் இன்னிங்ஸுக்கு முடிவுரை எழுதியது. ஆனாலும் பவர்பிளே முடிவில் 42/2 என கொஞ்சம் கௌரவமான நிலையிலேயே குஜராத் இருந்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் வீசிய அந்த 6வது ஓவர், கிளாஸான பௌலிங் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் எனப் பாடம் எடுத்தது. சாய் சுதர்சனும், ஹர்திக் பாண்டியாவும் களத்திலிருந்தனர்.
அடுத்த ஓவரை வீச வந்தார் ரிஷி தவான். வழக்கம்போல, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூக்கைக் காத்துக்கொள்ள மாஸ்க் அணிந்து வந்தார். இரண்டாவது பந்தை அவர் லெந்த் பாலாக வீச, ஹர்திக் கவர் டிரைவ் ஆட முற்பட்டு, எட்ஜாகி கீப்பரிடம் பந்தை ஒப்படைத்தார். அப்போதே குஜராத் ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும் ‘இன்னைக்கு சிரமம்தான் போலயே!’. மில்லர் களத்துக்கு வந்தும் குஜராத்துக்கு நம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் மில்லர் எப்போது அடிப்பார் என்பது அவருக்கே தெரியாது. இவ்வளவு ஏன், பல Permutation and Combination போட்டு ஆராய்ந்தாலும் எந்தக் கணிதக் கோட்பாட்டாலும் அந்த ரகசியத்தை மட்டும் கண்டறியவே முடியாது. சாய் சுதர்சனும், மில்லரும் டெஸ்ட் மேட்சே தோற்கும்படி, ‘பொறுமையே பெருமை’ என அனைவரையுமே சோதித்தனர்.
Source link
sports.vikatan.com
ர.சீனிவாசன்