ஹிட் அடித்த கதை
மலையாளம் மொழியில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த ‘ஹெலன்’ படத்தின் மறு ஆக்கம் தான் அன்பிற்கினியாள். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தையாக அருண்பாண்டியன் சிவம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்மாவின் மருத்துவச் செலவுக்காக கடனை அடைக்க கனடா சென்று நர்ஸாகப் பணிபுரிய முயல்கிறார் அவரின் மகள் அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்). இதற்கிடையில் தந்தைக்கு தெரியாமல் தன் காதலை அன்பிற்கினியாள் வளர்த்து வர, பின்னர் அது தந்தைக்கு தெரியவந்து சிக்கல் உண்டாகிறது. அதை தொடர்ந்து பணியில் இருந்து அன்பிற்கினியாள் வீடு திரும்பாமல் இருக்க படத்தின் கதைக்களம் அங்கிருந்து நகர தொடங்குகிறது.
16 வருடத்திற்கு பிறகு
தமிழில் முன்னர் பிரபலமான நடிகரான அருண்பாண்டியன். கடந்த 16 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். நீண்ட வருடங்களுக்கு பின் அருண்பாண்டியன் இப்படத்தில் சிவம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னர் நடித்தது போலவே தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறார். மகளின் காதலனையும், காவலர்களையும் அருண்பாண்டியன் அணுகும் விதம் அவரின் சிறந்த நடிப்பை வெளிக்காட்டுகிறது. இந்த கதைக்கு அருண் பாண்டியனின் நடிப்பு பெரிய பலமாக அமைந்துள்ளது. நிஜ வாழ்வில் அப்பா, மகளாக இருப்பவர்களே திரையில் அப்பா, மகளாக நடித்திருப்பதால் அவர்களுகிடையேயான பாசமும், நடிப்பும் இயல்பாய் அமைந்திருக்கிறது. ஸ்டண்ட் காட்சிகளில் மட்டுமே அதிகம் ரசித்த அருண்பாண்டியன்
இத்தனை வருடங்களுக்கு பிறகு எமோஷனலாக நடிக்க சில காட்சிகள் மட்டும் கொஞ்சம் ஒட்டவில்லை .
2ம் படத்தில் நாயகியாக
தமிழில் தும்பா படத்திற்குப் பிறகு கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள இரண்டாவது படம் இதுவாகும். தன்னுடைய இரண்டாவது படத்திலேயே பெண்ணை மையமாக கொண்ட கதையில் நாயகியாக நடித்துள்ளார். இந்த கதைக்கு நாயகியின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது, அதனை சரி வர கொடுத்துள்ளார் கீர்த்தி பாண்டியன். அப்பாவிடம் பாசத்தைக் கொட்டுவதிலும், காதலனுடன் செல்லச் சண்டை போடுவதிலும், ஆபத்தில் சிக்கி கொண்ட இடங்களில் தன்னுடைய அசாத்திய நடிப்பால் அசர வைக்கிறார் கீர்த்தி பாண்டியன். படத்தை பார்த்த அனைவரின் மனதிலும் அன்பிற்கினியாளாக, கீர்த்தி பாண்டியன் நிச்சயம் இடம்பிடிப்பார்.
சரியான பங்களிப்பு
கீர்த்தி பாண்டியனின் காதலனாக பிரவீன் ராஜ், எஸ்.ஐ.யாக நடித்த ரவீந்திர விஜய், சிக்கன் கடை மேலாளராக நடித்த பூபதி ராஜா, மால் செக்யூரிட்டியாக நடித்த ஜெயராஜ், ஏட்டாக நடித்த அடிநாட் சசி என படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் தன்னுடைய பங்கை சிறப்பாக அளித்துள்ளனர். இயக்குனர் கோகுல் இவர்களை பயன்படுத்திய விதமும் மிகச்சரியாக அமைந்து திரைக்கதைக்கு உதவியுள்ளது. மலையாள சினிமாவை ரீமேக் செய்யும் போது
தமிழ் சினிமாவுக்கு ஏற்றவாறு மிகவும் நேர்த்தியாக இயக்குனர் கோகுல் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து சமீபத்திய ட்ரெண்டிங்கான விஷயங்களை சேர்த்து மிகவும் ரசிக்க வைக்கிறார் .
பக்க பலமாக அமைந்தது
படத்தில் ஜாவித் ரியாஸின் இசை கதைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் சரிவர கதையில் பொருந்தியுள்ளது குறிப்பாக ஆணகட்டி பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. கதாநாயகி ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் இடங்களில் பின்னணி இசை ஆச்சரியமூட்டுகிறது. பிரதீப் ராகவின் நேர்த்தியான எடிட்டிங், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
நேர்த்தியான இயக்கம்
ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது ரீமேக் படமாக இருந்தாலும், அவரின் மற்றப் படங்களை காட்டிலும் இதனை நேர்த்தியாக இயக்கியுள்ளார். அப்பா- மகள் கதை என வழக்கமும் பழக்கமுமான பாணியில் ஆரம்பித்தாலும் பின்னர் திரில்லர் காட்சிகளின் மூலம் கவனத்தை ஈர்க்கிறார். மலையாள படமான ஹெலன் படத்தை ஒப்பிடுகையில் பெரிதும் குறை இல்லாமல் ஈடு கொடுத்து தயாரித்துள்ளனர். சிறு சிறு குறைகளை தவிர்த்து பார்த்தால் அன்பிற்கினியாள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. முதல் பாதியில் சிறு சிறு தொய்வு இருந்தாலும் இரண்டாம் பாதியில் நம்மை மிகவும் ரசிக்க வைக்கின்றனர். அன்பிற்கினியாள் அனைவரது அன்பையும் எழிதில் பெறக்கூடியவள்