என்ன கதை
பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அஃப்ரீன் (ராஷ்மிகா) இந்திய ராணுவ வீரரான ராம் (துல்கர் சல்மான்) எழுதிய காதல் கடிதங்களை சீதாவை (மிருணாள் தாகூர்) கண்டுபிடித்து கொடுத்தாரா? இல்லையா? என்பது தான் சீதா ராமம் படத்தின் கதை. ராமுக்கு என்ன நேர்ந்தது, அட்ரஸ் தெரியாத சீதா யார்? இதை ராஷ்மிகா மந்தனா 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏன் தேடி அலையணும் என்பதை விறுவிறுப்புடன் சொல்லி அசத்தி இருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவப்புடி.
காதலும் தேசப்பற்றும்
தனக்கு யாரும் இல்லை அநாதை என ஃபீல் செய்து வரும் ராம் நாட்டிற்காக செய்யும் ஒரு விஷயத்துக்காக கொண்டாடப் படுகிறார். அவருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து வரும் கடிதம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது. ராம் மற்றும் சீதா நேரில் சந்தித்து எப்படி காதல் புரிகின்றனர். பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை ஓவியங்களான ஒளிப்பதிவுடன் சீட் எட்ஜ் த்ரில்லர் கதையாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், இந்தியாவை காட்டிக் கொடுக்க துணியாத ராமின் தேசப்பற்றுக்கு கடைசியாக என்ன கிடைத்தது என்கிற காட்சிகள் எல்லாம் கூஸ்பம்ப்ஸ்.
செம ட்விஸ்ட்
சீதா ராமம் என்கிற டைட்டிலை வைத்து விட்டு, ராமுக்கும் நூர் ஜகானுக்கும் இடையேயான காதல் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர். சீதாவின் உண்மையான பெயர் சீதாவே இல்லை இளவரசி நூர் ஜஹான். காணாமல் போகும் ராமை கண்டுபிடிக்க நூர் ஜஹான் நடத்தும் சட்டப் போராட்டம் மற்றும் உண்மை தெரிந்து உடைந்து போகும் இடங்களில் எல்லாம் மிருணாள் தாகூர் செம ஸ்கோர் செய்கிறார்.
அந்த குழந்தையே நீங்க தான்
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிக்கு போனால் திரும்பி வர முடியாது என்கிற டஃப்பான டாஸ்க்கிற்கு செல்லும் ராம் அனைத்தையும் பக்காவாக முடித்து விட்டு தப்பிக்கும் தருவாயில், எரிகிற வீட்டில் சிக்கி உள்ள ஒரு குழந்தையை காப்பாற்ற போய் மாட்டிக் கொள்கிறார். ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் இருந்தே தனது தாத்தா ஏன் இந்த போஸ்ட் மாஸ்டர் வேலையை நம்ம கிட்ட கொடுத்தாருன்னு ராமையும் சீதாவையும் வெறுப்போடு தேடி அலைந்து கொண்டிருக்க கடைசியில் ராம் காப்பாற்றிய அந்த குழந்தையே ராஷ்மிகா தான்னு தெரிய வரும் சீன் கைதட்டல்களை அள்ளுகிறது.
பலம்
இயக்குநர் ஹனு ராகவப்புடி காதல் மற்றும் நாட்டுப்பற்றை ஒன்றாக கலந்து ஒரு அழகான காதல் கவிதையை திரையில் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பி.எஸ். வினோத்தின் கேமரா லென்ஸ் வழியே காஷ்மீரின் ரம்மியமான அழகை அப்படி ரசிக்க முடிகிறது. துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு அபாரம். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையில் ஏற்கனவே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், பின்னணி இசையையும் பின்னி எடுத்துள்ளார்.
பலவீனம்
சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படத்தில் சூர்யா தான் யாரென்று கடைசி வரை அசினுக்கு சொல்ல மாட்டார். அதே கொஞ்சம் உல்டாவாக இந்த படத்தில் அமைந்திருப்பது மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டாம் பாதியில் கதையின் நீளத்தை சற்றே இயக்குநர் குறைத்திருந்தால் சீதா ராமம் மேலும் சிறப்பாக வந்திருக்கும். சீதா ராமம் – தியேட்டரில் தாராளமாக பார்க்கலாம்!