லிஜோவோட வரலாறைத் தெரிஞ்சுக்கலாமா?
”கேரளாவில் உள்ள இடுக்கியிலதான் பிறந்து வளர்ந்தேன். அப்பா ஜோஸ், அம்மா லிஜோம்மா. இவங்க ரெண்டு பேரோட பெயரின் முதல் எழுத்துக்களை சேர்த்து லிஜோ ஆச்சு. அது ஆண்களுக்கான பெயர் மாதிரி இருந்ததால `மோல்’ன்னு சேர்த்து லிஜோ மோல் ஆனேன். இதான் என் பெயர் காரணம். கொச்சியில விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சேன். காலேஜ் முடிச்சதும், ஒரு சேனல்ல ரெண்டு வருஷம் ஜெர்னலிஸ்ட்டா ஒர்க் பண்ணியிருக்கேன். அப்ப அது கொஞ்சம் ஹெக்டிக்கா இருந்துச்சு. அந்த அனுபவங்களால மேற்கொண்டு விஸ்காம் படிக்கணும்ங்கற எண்ணத்தையே உதறிட்டேன். அப்புறம் முதுகலை பட்டம் பெற விரும்பினேன். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துல லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் படிச்சேன். அங்கே செகண்ட் இயர் படிக்கறப்பதான் சினிமா வாய்ப்பு, தேடி வந்துச்சு. நடிக்க ஆர்வமே இல்லாமல் இருந்தேன். மலையாள திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரனோட மனைவி உன்னிமாயா மூலமா, ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துல நடிக்கற வாய்ப்பு வந்துச்சு. அவங்களாலதான் அந்தப் படத்துல நடிச்சேன். ஆனா, அதன்பிறகும் நடிப்புமீது ஆசை இல்ல. எனக்கு டான்ஸ் ஆட வராது. நடிக்க வந்த பிறகும்கூட டான்ஸ் கிளாஸ் போனதில்ல. டான்ஸ் ஆடுற மாதிரி கதைகள் வந்தால் கூட, அதை மறுத்திடுறேன்.”
`ஜெய்பீம்’ படத்துக்குப் பிறகு ஏன் இவ்ளோ இடைவெளிக்குப் பின் அடுத்த படம் பண்றீங்க?
”நான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’யில நடிச்சதுக்குப் பிறகு, தொடர்ந்து அக்கா கேரக்டர்ல நடிக்கக் கேட்டு வாய்ப்புகள் வந்துச்சு. ஒரே மாதிரி படங்கள் பண்றதுல விருப்பமில்ல. ஜெய்பீமுக்குப் பிறகுகூட, செங்கேணி போல, கிராமத்து கேரக்டர்கள்தான் நிறைய வந்தது. காலேஜ் படிக்கறப்ப நடிக்கவே விருப்பமில்லாமல்தான் நான் சினிமாவுக்கே வந்தேன். ஆனா, ‘ஜெய்பீம்’ல நடிச்ச பிறகுதான் நடிப்பு மீது ஆர்வம் வந்துச்சு. அந்தப் படத்துல இருந்துதான் நடிப்புக்காக ஹோம் ஒர்க் பண்ணினேன். இருளர் சமூகத்தைப் பத்தி, அவங்க பழக்க வழக்கங்களைப் பத்தியும் எனக்கு எதுவும் தெரியாது. படத்தோட இயக்குநர் த.செ.ஞானவேல் அடிக்கடி என்னை `நீங்க லிஜோவா இருக்காதீங்க. செங்கேணியா இருக்கணும்’னு சொல்லிட்டே இருப்பாங்க. அதனால நேரம் கிடைக்கறப்ப அந்த ஸ்கிரிப்ட்டை எடுத்து படிச்சுகிட்டே இருப்பேன். அந்தப் படத்துல நடிக்க வந்த பிறகுதான் படத்துல சூர்யா சார் நடிக்கறார்ங்கறதே தெரிஞ்சது. அந்த சமூகத்து மக்களோட மக்களா பழகி, அவங்க மனசில இடம்பிடிச்சதைப் பெரிய விஷயமா கருதுறேன். ஆனாலும், செங்கேணியா மாதிரி மறுபடியும் ஒரு கேரக்டர் என்னால பண்ணமுடியாது.” நெகிழ்கிறார் லிஜோ.
திரைப்பட அனுபவம் குறித்தும், தன் சொந்த வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை இந்த வீடியோவில் பகிந்திருக்கிறார்.