இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துக் காணப்படுகின்றது. இன்றைய தேதி (நவம்பர் 17) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.40க்கும், டீசல் ஒரு லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது சென்னை விலை விபரம் ஆகும்.
நாட்டின் பல பகுதிகளில் இதை விட அதிக விலையில் எரிபொருள்களின் விலை உயர்ந்து காணப்படுகின்றது. இவற்றில் தப்பிக்க உதவும் வகையில் மாற்று திறன் கொண்ட வாகனங்கள் இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. அந்தவகையில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சிறந்த மாற்று வாகனமாக சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன.
இந்த சந்தையில் அதிகப்படியான தேர்வை மாருதி சுசுகி நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புதிய சிஎன்ஜி தேர்வு கொண்ட வாகனங்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. அந்தவகையில், மிக விரைவில் நிறுவனத்தின் புகழ் பெற்ற கார் மாடல்களான டியாகோ மற்றும் டிகோர் ஆகியவை சிஎன்ஜி எஞ்ஜின் வசதியுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது.
Source: GaadiWaadi
இந்த கார் மாடல்களுக்கே தற்போது டாடா மோட்டார்ஸ் கார் விற்பனையாளர்கள் புக்கிங் பணிகளை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னரே இதனை டீலர்கள் சிலர் தொடங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மிக விரைவில் சிஎன்ஜி வசதிக் கொண்ட டியாகோ மற்றும் டிகோர் கார்கள் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருப்பதை முன்னிட்டு இப்பணியில் டாடா கார் விற்பனையாளர்கள் களமிறங்கியிருக்கின்றனர். இதற்கான முன்தொகை கட்டணம் எவ்வளவு வசூல் செய்யப்படுகின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
டாடா நிறுவனம் தற்போது விற்பனைச் செய்து வரும் ஒரே ஒரு செடான் ரக வாகனம் டிகோர் ஆகும். இதில், சிஎன்ஜி தேர்வு வழங்கப்படுவது மக்களை அக்காரின் பக்கம் ஈர்க்க உதவும் என யூகிக்கப்படுகின்றது. அதேநேரத்தில் இது நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனமாகும். ஆகையால், சிஎன்ஜி தேர்வு டிகோர், எரிபொருள் விலையுயர்வில் இருந்து மட்டுமின்றி பெரும் ஆபத்துகளில் இருந்தும் அதன் பயனர்களை காக்கும் என்பது தெரிகின்றது.
பிஎஸ்-6 மாசு உமிழ்வு நடைமுறைக்கு வந்ததன் காரணத்தினால் அதிகம் விற்பனையாகும் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் எஞ்ஜின் டியாகோவின் விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் கணிசான விற்பனை இழப்பை டாடா மோட்டார்ஸ் பெற்றது. இந்த இழப்பை புதிய சிஎன்ஜி தேர்வு டியாகோ மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டாடா டியாகோ சிஎன்ஜிக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, மாருதியின் சிஎன்ஜி வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதைக் கருத்தில் கொண்டே டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி வாகனங்களுக்கும் நல்ல டிமாண்ட் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
அதுமட்டுமின்றி, டாடாவின் இந்த இரு கார் மாடல்களும் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவை ஆகும். ஆகையால், மக்கள் மத்தியில் நிச்சயம் இந்த சிஎன்ஜி தேர்வுகளுக்கு அமோகமான வரவேற்பு எதிர்பார்க்கப்படுகின்றது. சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வரும் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் உருவங்களில் பெரியளவில் மாற்றம் இருக்காது என கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் அவை சிஎன்ஜி வாகனங்கள் என்பதைக் குறிக்கும் பொருட்டு சிஎன்ஜி-க்கான பேட்ஜ்கள் அக்கார்களில் இடம் பெறும். தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மோட்டார் கொண்ட வாகனங்களுக்கு மாற்றாக ஏற்கனவே மின்சார கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது.
அந்தவகையில், தனது ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய கார் மாடல்களை எலெக்ட்ரிக் கார்களாக நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதில், நிறுவனத்தின் டிகோர் இவி மின்சார காரே இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.