பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஜெயம்ரவி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கார்த்தி ஒரு சுவராசியமான டுவிட்டை பதிவு செய்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஜெயம்ரவியை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகர் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமரர் கல்கி எழுதிய சரித்திர நாவலான ’பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக வைத்து ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்து வரும் விக்ரம் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவி தனது பகுதியை முடித்து விட்ட நிலையில் தற்போது விக்ரமும் படப்பிடிப்பை முடித்து விட்டார். இதனால் அவர் தனது அடுத்த படத்திற்காக கெட்டப்பை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வந்தியதேவன் கேரக்டரில் நடித்து வரும் கார்த்தியும் விரைவில் தனது பகுதியின் படப்பிடிப்பை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகமும், அதனை அடுத்து ஒரு சில மாதங்கள் இடைவெளியில் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.