குவாஹாட்டி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2-வது டி20 போட்டி அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் உள்ள மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட் செய்த போது ஆடு களத்திற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. வழக்கமாக பாம்பு தான் படம் எடுக்கும். ஆனால் மைதானத்தில் இருந்த கேமராக்கள் பாம்பை படம் பிடித்து இருந்தன. இந்த போட்டியின் 8-வது ஓவர் வீசப்படுவதற்கு முன்னதாக பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பாம்பை பிடிக்க மைதான ஊழியர்கள் தேவையான கருவிகளுடன் விரைந்து சென்றனர்.
அதனை கவனித்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அந்த படத்தை பகிர்ந்திருந்தனர். சிலர் வியப்பினால் சுவாரஸ்யமான கேப்ஷனை அந்த படத்திற்கு போட்டிருந்தனர். என்றாலும் போட்டிக்கு நடுவே மைதானத்தில் பாம்பு புகுந்தது மைதான நிர்வாகத்தின் கவன குறைவு என்று அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், அசாம் கிரிக்கெட் சங்கம் ( ஏசிஏ) செயலாளர் தேவஜித் சைகியா இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
“சில போட்டிகளில் ரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்துவிடுவார்கள். ஆனால் இங்கு வித்தியாசமாக பாம்பு புகுந்துள்ளது. பாம்பும் போட்டியை ரசித்து பார்க்க வந்துள்ளது. வீரர்களை நெருக்கமாக பார்ப்பதற்காக பாம்பு வந்திருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால், பாதியில் அதை பிடித்து வெளியே விட்டதால் பாம்பு மகிழ்ச்சி அடைந்திருக்காது” என்று சைகியா பேசினார். அதேபோல் போட்டியின் நடுவே, மைதானத்தின் விளக்குகளும் சரிவர எரியாமல், அணைந்த சம்பவமும் நேற்றுமுன்தின போட்டியில் நடந்தது.
இதுதொடர்பாக பேசிய சைகியா, “இது ஒரு பெரிய சம்பவமாக நான் நினைக்கவில்லை. சிறிதுநேரத்தில் இயல்புநிலை அங்கு திரும்பியது. ஸ்டேடியத்தில் எல்இடி அமைப்பு இல்லை. டுத்த இரண்டு-மூன்று மாதங்களில் அதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
#Snake on the field #INDvSA#Guwahati #INDVSA #Guwahati pic.twitter.com/mwb36fRNpy
— Latest_News_update_official (@ramvish93296061) October 2, 2022