வசன உச்சரிப்பு, முற்போக்கு கருத்துகளால் புகழ்பெற்ற எம்.ஆர்.ராதா
வெளிநாட்டில் தொழிலாளர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று நீ வந்து பேசணும், என்று எஸ்.எஸ்.ஆர் கேட்க, “அங்க நின்னுகிட்டு கூட்றான் இங்க குனிஞ்சிகிட்டு கூட்றான்னு சொல்லு போ, இந்தியாவில பாதிபேர் எதுக்கு வாழ்றோம்னு தெரியாமலே வாழ்றான்” என்று எம்.ஆர்.ராதா சொல்வார். ஜீவகாருண்ய சங்கம்னா என்னா தம்பி அர்த்தம்? என்று எம்.ஆர்.ராதா கேட்க உயிர்களை கொல்லக்கூடாது என்பார் எஸ்.எஸ்.ஆர், உயிர்கள கொல்ல மாட்டீங்களா அப்ப ராத்திரியில மூட்டப்பூச்சி கடிச்சா என்ன பண்ணுவீங்கன்னு எம்.ஆர்.ராதா கேட்பார். இந்த வசனம் இப்பவும் மிகப்பிரபலம். ரத்தக்கண்ணீர் அதன் வசனங்களுக்காக பெயர் போனது அதைவிட அதில் நடித்த எம்.ஆர். ராதாவின் நடிப்பு. தனது நாடகத்தை திரைப்படமாக எடுத்தார் எம்.ஆர்.ராதா. தமிழகத்தில் சக்கைப்போடு போட்டது. இன்றும் இப்படத்தின் வசனங்கள் பெயர்போனவை.
ராணுவ வீரரின் மகன் எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதாவின் தந்தை ராணுவ வீரர். முதல் உலகப்போரில் ரஷ்ய எல்லையில் பணியாற்றியபோது போரில் உயிரிழந்தார். தாயுடன் ஏற்பட்ட கோபத்தில் வீட்டைவிட்டு பிரிந்து சென்னைக்கு ஓடிவந்து சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் போர்டர் வேலை பார்த்துவந்தவர், ஒரு நாள் பயணியாக வந்த ஆலந்தூர் பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளர் எம்.ஆர்.ராதாவின் செயலை பார்த்து அவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றார். அது முதல் எம்.ஆர்.ராதா நாடக கம்பெனி நடிகரானார். அதுமுதல் மதுரை பாய்ஸ் கம்பெனியில் இணைந்தார்.
தமிழகத்தின் உச்ச நடிகர்கள் பாலகர்களாக இருந்த காலத்திலேயே உச்ச நடிகர் எம்.ஆர்.ராதா
தமிழகத்தில் 1930 களில் எம்.ஆர்.ராதா கொடிகட்டி பறந்தார். பின்னர் 1937 ஆம் ஆண்டில் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்து புகழ்பெற்றார். அந்தகாலத்தில் சீர்த்திருத்த கருத்துக்களை வைத்து ராதா போட்ட நாடகம் பலத்த வரவேற்பையும், எதிர்ப்பையும் ஒரு சேர பெற்றது. அவரது நாடகத்துக்கு வரும் எதிர்ப்பாளர்களை கம்பு சுத்தி சண்டையிட்டு ஓடவிடும் தைரியசாலி எம்.ஆர்.ராதா. 1942 ஆம் ஆண்டு திரையுலகை விட்டு விலகி நாடகத்துறைக்கே போனார் எம்.ஆர்.ராதா. எம்.ஆர்.ராதா என்றால் நாடக உலகிலும், திரையுலகிலும் அனைவருக்கும் பயம். அதிகம் படிக்காவிட்டாலும் ஆங்கில பாணியை அவர் கையாளும் விதம் அலாதியானது.
1954 -ல் ரத்தக்கண்ணீர் மூலம் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய எம்.ஆர்.ராதா
திரையுலகை விட்டு எம்.ஆர்.ராதா விலகி இருந்தாலும் நாடகம், அரசியல் என புகழ்ப்பெற்றிருந்தார். அவரது புகழ்பெற்ற நாடகமான ரத்தக்கண்ணீர், தூக்குமேடை, லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு போன்றவை மிகப்பிரபலம். தான் மறையும் வரை நாடகங்களை திரையிட்டவர் எம்.ஆர்.ராதா. திராவிட இயக்கத்தினர் திரையுலகை ஆக்கிரமிப்பதைக்கண்ட எம்.ஆர்.ராதா 1954 ஆம் ஆண்டு ரத்தக்கண்ணீர் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தமிழகம் முழுவதும் அடி காந்தா என்கிற வசனத்தையும், எம்.ஆர்.ராதாவின் நக்கல் நய்யாண்டி வசனத்தையும் பேசாத இளைஞர்களே இல்லை எனும் அளவுக்கு வசனம் புகழ்பெற்றது.
திரையுலகின் தவிர்க்க இயலா ஆளுமை எம்.ஆர்.ராதா
அத்ன் பின்னர் எம்.ஆர்.ராதா தமிழ் திரையுலகின் தவிர்க்க இயலாத நடிகர் ஆனார். குணச்சித்திரம், வில்லன், காமெடி என அவர் கைவைக்காத இடமே இல்லை எனலாம். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் ஆகியோருக்கு நாடக உலகில் எம்.ஆர்.ராதா சீனியர் என்பதால் அவருக்கு திரையுலகம் தனி மரியாதை கொடுத்தது. செட்டுக்குள் எம்.ஆர்.ராதா இருக்கிறார் என்றால் கப்சிப் என்று இருக்கும். தனது துணிச்சல், யதார்த்தமான பேச்சால் எம்.ஆர்.ராதா பக்கம் எவரும் வர மாட்டார்கள். அரசியலிலும் முக்கிய தலைவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ராதா.
காரில் வைக்கோல் போர் ஏற்றி சென்னையை சுற்றியவர்
எம்.ஆர்.ராதாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பணத்தால் கொழித்த ராதா டாட்ஜ் என்கிற வெளிநாட்டு கார் ஒன்றை வைத்திருந்தார். அதில் தனது எறுமை மாட்டுக்கு வைக்கோல் வாங்கிக்கொக்கொண்டு சென்னையைச் சுற்றி வலம் வந்தது பெரிதாக பேசப்பட்டது. விலை உயர்ந்த காரில் மாட்டுக்கு வைக்கோலா என கேட்டவர்களுக்கு “கலர் பெயிண்ட் அடிச்சு வெச்சா வெளிநாட்டு கார் என்று தலையிலா தூக்கி வச்சிக்க முடியும்” என்று கேட்டவர் எம்.ஆர்.ராதா. சினிமா காரண தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடாதே, அவன் காசு வாங்கிக்கிட்டு அவன் தொழிலை செய்றான் என்று வெளிப்படையாக பேசியவர். தனது நாடகத்தை பார்க்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் அடித்து துரத்துவார். போங்கடா போய் படிங்கடா நாங்க எங்க வேலைய பார்க்கிறோம், நீங்க உங்க வேலைய பாருங்கடான்னு விரட்டுவாராம் (இன்றைக்கு ஊர் ஊராக கல்லூரி கல்லூரியாக போய் பட ப்ரமோஷன் செய்கிறார்கள்)
சர்ச்சையில் சிக்கிய எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதா அவரது வசனம், உடல் மொழி, சீர்த்திருத்த கருத்துகள், முற்போக்கு கருத்துகளுக்காக அவரை பிடிக்காதவர்களாலும் ரசிக்கப்பட்டதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி. சினிமா புகழ், பணம், வெற்றி அனைத்தையும் சம்பாதித்தாலும் சர்ச்சையிலும் சிக்கினார் எம்.ஆர்.ராதா. திராவிடர் கழகத்திலிருந்த எம்.ஆர்.ராதாவிற்கும், திமுகவிலிருந்த எம்ஜிஆருக்கும் அவ்வப்போது மோதல் எழுந்த நிலையில் எம்ஜிஆரை சுட்ட வழக்கில் சிக்கினார். அத்துடன் அவரது திரை வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 67 ஆம் ஆண்டு முதல் 71 ஆம் ஆண்டு வரை சிறையிலிருந்தார்.
பெரியார் பிறந்தநாளில் மறைந்த சீடர்
பின்னர் சிறையிலிருந்து வெளிவந்த அவர் சில படங்களில் நடித்தார். மீண்டும் நாடகங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் ஒரு விழாவில் முதல்வர் எம்ஜிஆரை சந்தித்தார். இருவரும் அனைத்தையும் மறந்து பேசினர். தமிழ் சினிமாவில் எதற்கும் அஞ்ஞாத ஆளுமை மிகுந்த மனிதர்களில் முதன்மையானவர் எம்.ஆர்.ராதா என்றால் அதை யாரும் மறுக்க மாட்டார்கள், பெரியாரின் சீடரான எம்.ஆர்.ராதா 1979 ஆம் ஆண்டு செப்.17 இதே நாளில் காலமானார். பெரியாரின் சீடர் பெரியார் பிறந்த நாளில் மறைந்தது ஏதேச்சையாக அமைந்தது என்றாலும் பெரிதாக பார்க்கப்படுகிறது.