ஷாலினி அஜித்
காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, அஜித்துடன் அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே,பிரியாத வரம் வேண்டும் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் ஷாலினி. மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் அந்த படத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.
காதல் திருமணம்
அஜித்தின், அமர்க்களம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அஜித்தை காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு அனோஸ்கா குமார் என்ற மகளும், ஆத்விக் குமார் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பம் குட்டி என செட்டிலாகிவிட்டார் ஷாலினி.
21 ஆண்டுகளுக்கு பிறகு
இந்நிலையில்,மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகை ஷாலினி நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 21ஆண்டுகளுக்கு பிறகு ஷாலினி திரைப்படத்தில் நடித்துள்ளார். அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன்
இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், ரஹ்மான்,பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதையை குமாரவேலுடன் இணைந்து மணிரத்னமும் உருவாக்கி உள்ளார்.
அடுத்த மாதம் டீசர் ரிலீஸ்
சோழ மன்னர்களின் கதை என்பதால் தஞ்சாவூரில் படத்தின் டீசரை அடுத்த மாதம் வெளியிட்டு ப்ரமோஷன் பணிகளை தொடங்க இருக்கிறார் மணிரத்னம். தஞ்சாவூரில் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்ட விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு பிறகு படக்குழுவினர் உலக நாடுகள் முழுக்க படத்தின் ப்ரமோஷனுக்காக செல்ல இருக்கிறார்கள்.
படக்குழுவிளக்கம்
இப்படத்துக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான் சில காட்சிகள் திருப்தியாக இல்லை என்று கூறியதாகவும் இதையடுத்து அந்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நடத்த மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. இணையத்தில் பரவி தகவல் உண்மை இல்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.