[ad_1]
சின்னத்திரையில் `லொள்ளு சபா’, `காமெடி பஜார்’ என ஒரு சீஸனில் கலக்கியவர் மாறன். அதன்பிறகு சந்தானத்தின் படங்களில் தனி ஸ்கோர் செய்தவர். செய்து வருபவர். சமீபத்திய `டிக்கிலோனா’வில் கூட `இன்னும் என்னை பைத்தியக்காரனாவே நினைசிட்டு இருக்கல’, `விடுதலை ரொம்ப முக்கியம்’ போன்ற காமெடி பன்ச்களில் கலக்கப்பூட்டியவர். இப்போது கைவசம் அரை டஜன் படங்கள் லைன் அப்பில் இருப்பதால் உற்சாகத்தோடு இருப்பவருடன் உரையாடினார்.
“உங்க ஒரிஜினல் பெயரே இதானா?”
“மாறன் நானா வச்சுக்கிட்ட பெயர். என்னுடைய நிஜப்பெயர் இளஞ்சேரன். தேர்தல்ல நான் ஓட்டுப்போட போனா என்னை சந்தேகமா பார்ப்பாங்க. `என்னமோ நான் இளஞ்சேரன்ங்கற பெயருக்கு கள்ள ஓட்டுப்போட வந்தது போல நினைப்பாங்க’ இன்னொரு விஷயம் மாறன்னு கையெழுத்துப் போட்டு, போட்டு இளஞ்சேரன்னு வராது. வங்கி, பாஸ்போர்ட் ஆபீஸ்னு போனா ஒரிஜினல் கையெழுத்து தான் போட வேண்டியிருக்கும். அதனால சும்மா இருக்கற டைம்ல என் தொடையில ஒரிஜினல் பெயரை கையெழுத்துப் போட்டு பார்ப்பேன். ஆனா, நான் படிப்பில கம்மிதான். தமிழை தவிர, மத்த சப்ஜெக்ட்ஸ்ல நான் சுமாருதான். ஆனா, பாக்ஸிங், சிலம்பம்னு ‘சார்ப்பட்டா பரம்பரை’ மாதிரிதான் சுத்திட்டு இருப்பேன்.
ஆனா, ஃபேமிலி பின்புலம் பெருசு. அப்பா தி.மு.க.வில் கழக பேச்சாளரா இருந்தவர். எங்க வீட்டுக்கு அண்ணா, கலைஞர், பெரியானு தலைவர்கள் பலரும் வந்திருக்காங்க. பெரியார் எங்க தெருவில மேடையில பேசுறதைப் பார்த்து ரசிச்சிருக்கேன். அப்ப எனக்கு நாலஞ்சு வயசு இருக்கும். அவரோட எடுத்த போட்டோவையும் இன்னும் வச்சிருக்கேன். ஆரம்ப காலங்கள்ல ஓவியம் நல்லா வரைவேன். எனக்கு கம்யூனிஸ்ட் கட்சியில ஈடுபாடு இருந்ததால கம்யூனிஸ்ட் கட்சிக்காக சுவர் விளம்பரங்கள் வரைய போயிருக்கேன்.
`வாங்க தோழர் சுவர்ல எழுதப் போலாம்’னு கூப்பிடுவாங்க. நானும் அங்கே போய் `ஏய் அமெரிக்க ஏகாதிபத்தியமே’னு சின்ஸியரா எழுதுவேன். அப்புறம் அதுல ஈர்ப்பு ஏற்பட்டு காரல் மார்க்ஸ் , ஏங்கெல்ஸ், மாசேதுங்னு புத்தகங்கள் தேடிப் படிச்சிருக்கேன். அப்பப்ப தீக்கதிர்ல வர்ற கார்ட்டூன் வரைஞ்சு வச்சதுண்டு. கம்யூனிஸ்ட் என்னை வேற மாதிரி மாத்தி வச்சிடுச்சு. தினமும் ஒரு போராட்டத்துல கலந்துக்கிட்டு, கைது ஆகியிருக்கேன். ரேஷன் கடையில கூட கொடி பிடிச்சு போராடியிருக்கேன். பின்னாளில் அதே ரேஷன் கடையில வேலை செய்திருக்கேன் அது வேற விஷயம். நான் கெட்ட பழக்கங்கள் நிறைய இல்லாமல் இருக்க இதெல்லாம் ஒரு காரணம். நான் கட்சியில தீவிரமா இயங்குறதுல அப்பா ஃபீல் ஆனார். அவருக்கு எதிரா இருக்கறதா நினைக்க ஆரம்பிச்சிட்டார். ஆனா, அப்பவும் சரி, இப்பவும் எனக்கு அரசியல் ஆசையும் இல்ல. பணம் சம்பாதிக்கணும்னு எண்ணமும் வந்ததில்ல. வாழ்க்கையில படிப்பு முக்கியம்னு உணர்ந்தேன். இன்னிக்கு இணையதளம், யூடியூப்னு வளர்ந்தாலும் இன்னிக்கும் புத்தக கண்காட்சினா அவ்வளவு நூல்கள் விற்பனையாகுது. வரவேற்பு இருக்கு!”
“உண்மையை சொல்லுங்க வயசு என்ன?”
“அடடா! நேரடியாவே வயசை கேட்குறீங்களே.. வயசை சொன்னா, அத வச்சு ஒரு ஃப்ரெண்ட் கேரக்டர் கட் ஆகும். அப்பா கேரக்டருக்கு அழைப்பு வரும்.. இருந்தாலும் சொல்றேன். ஐம்பது ஆச்சு. இப்ப நீலம் புரொடக்ஷன்ல ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். நானும் தினேஷும் சேர்ந்து நடிக்கறோம். வேற மாதிரி மாறனை பார்க்கப் போறீங்க. அடுத்து செல்வராகவன் உதவியாளர் லதா இயக்கத்தில் நானும் யோகிபாபும் நடிக்கறோம். செல்வராகவன் அசிஸ்டென்ட்னு சொன்னதும் சீரியஸா கதை சொல்வாங்கனு நினைச்சேன். பக்கா காமெடி ஸ்கிரிப்ட். அவங்க கதை சொல்றவிதமும் கதையையும் கேட்டப்ப பிரமிச்சிட்டேன். அப்புறம் சந்தானம் படமும் பண்ணிட்டு இருக்கேன்.”
[ad_2]
Source link
cinema.vikatan.com
மை.பாரதிராஜா