இப்போதும் கூட ஃபார்முலா 2 தொடரில் இந்திய வீரர் ஜெகன் துருவாலா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவில் ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் மோடோ ஜிபி இப்போது முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது.
அடுத்த ஆண்டு எலக்ட்ரானிக் கார்கள் பங்கேற்கும் ஃபார்முலா இ ரேஸ் ஹைதரபாத்தில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் மோடோ ஜிபி தொடரும் இந்தியாவுக்கு வருவது இந்திய மோட்டோர் ரேஸ் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் தொகை ஒளிபரப்புத் துறைக்கு மிகப் பெரிய சந்தையாக விளங்கும் நிலையில், இந்த நகர்வு மோட்டோர் ரேஸிங்குக்கும் மிகப் பெரிய வெற்றியாகவே கருதப்படுகிறது.
2011 அக்டோபரில் திறந்து வைக்கப்பட்ட இந்த டிராக்கை முடிக்க சுமார் 2000 கோடி ரூபாய் செலவானது. 2011 முதல் 2013 வரையிலான ஃபார்முலா 1 இந்தியன் கிராண்ட் ப்ரீ ரேஸ் இங்கு நடந்தது. அந்த மூன்று ரேஸ்களிலுமே ரெட் புல் அணியைச் சேர்ந்த அப்போதைய உலக சாம்பியன் செபாஸ்டியன் வெட்டலே வெற்றி பெற்றார்.
அதன்பிறகு ஆசிய ரோட் ரேஸிங் சாம்பியன்ஷிப், MRF சேலஞ்ச், ஃபார்முலா ரீஜனல் சாம்பியன்ஷிப் இந்தியா போன்ற தொடர்கள் இந்த சர்கியூட்டில் நடைபெற்றன. கார் ரேஸிங்குக்காக வடிவமைக்கப்பட்ட இதில், பைக் ரேஸுக்காக சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மோடோ ஜிபி தொடர் இங்கு நடக்கவிருப்பதால் சுமார் 50,000 பேருக்கு வேலை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் ரேஸ் நடக்கும் வார இறுதி நாள்களில் மட்டும் 5000 பேருக்கு வேலை கிடைக்கும். இந்தத் தொடர் உத்திர பிரதேசத்தில் நடப்பது பற்றி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.