![Team India: உலகக் கோப்பைக்கான அணி எங்கே? பிசிசிஐ, டிராவிட், ரோஹித் – சில சந்தேகங்களும் கேள்விகளும்! | BCCI struggles in team management and way forward plans Team India: உலகக் கோப்பைக்கான அணி எங்கே? பிசிசிஐ, டிராவிட், ரோஹித் – சில சந்தேகங்களும் கேள்விகளும்! | BCCI struggles in team management and way forward plans](https://karkey.in/wp-content/uploads/https://gumlet.vikatan.com/vikatan/2022-01/da3c535c-726f-4eca-a734-287257ab4b2e/PTI11_17_2021_000139B_0_1637635520362_1639098330484.webp?rect=0,0,1600,840&w=1200&auto=format,compress&ogImage=true)
[ad_1]
குடவோலை முறையைப் பின்பற்றாத குறையாகத்தான் இந்தியா கேப்டன்களையும், வீரர்களையும் சமீபத்தில் தேர்வு செய்கிறது. இந்தாண்டில் மட்டும் மூன்று ஃபார்மேட்டில் ஏழு மாதங்களில், ஏழு கேப்டன்களை இந்தியா பார்த்துள்ளது. “ரெட் மற்றும் வொய்ட் பால் கிரிக்கெட்டுக்கு ஒரே கேப்டன்” என்று கூறி, கோலிக்குப் பதிலாக ரோஹித்தை மூன்று ஃபார்மேட்டுக்குமான முழுநேரக் கேப்டனாக்கிய அதே பிசிசிஐதான், தான் சொன்னதற்கு முரணாக ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் என உருட்டி விளையாடுகிறது. Bazzball மூலம் இங்கிலாந்து, டெஸ்டை டி20 அச்சில் வார்க்க, இடிபாட்டுக்குள் இருந்த இலங்கைகூட மெல்ல எழுந்து வர, இந்திய அணியோ ஆபீஸ் வாட்ஸ் அப் குரூப்பில் எல்லோரையும் அட்மினாக்குவது போல் அட்டகாசம் செய்து வருகிறது. பிசிசிஐ டிரெண்டிங் செய்து வரும், “எல்லோரும் அணியின் முன்னாள் கேப்டனே” திட்டத்தின் வாயிலாக, ஒட்டுமொத்த இந்திய அணியும் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
![ரவி சாஸ்திரி, தோனி, தோனி - கோலி](https://gumlet.vikatan.com/vikatan%2F2021-02%2Fc944d43b-4ddd-4389-a5de-118240c15071%2F20210211_085345.jpg?auto=format%2Ccompress)
கேப்டன்ஷிப் மாற்றம் தோனி – கோலி விஷயத்தில் அவ்வளவு அழகாக நடந்தேறியது. ஆனால், கோலி – ரோஹித் மாற்றம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. கேப்டன் பதவிக்குத் தற்போது மியூசிக்கல் சேர்தான் நடத்தி வருகிறது பிசிசிஐ. கோலி, கே.எல். ராகுல், ரோஹித், பண்ட், பாண்டியா, பும்ரா, வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு தவான் எனக் கேப்டன்களை வைத்தே, ஒரு பிளேயிங் லெவனை உருவாக்கி விடலாம். அதற்கு யாரைக் கேப்டனாகப் போடுவார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். எது எப்படியோ, குறுகிய காலகட்டத்தில் அதிகக் கேப்டன்களோடு பணியாற்றிய சாதனையை ஏற்கனவே கோச் ராகுல் டிராவிட் படைத்துவிட்டார். சலாம் ராகுல் பாய்!
சரி, வழிநடத்தும் தலைமைதான் மாறிக் கொண்டே இருக்கிறது, அணியின் வீரர்களுக்கான இடங்களிலாவது நிலையான தன்மை இருக்கிறதா என்று பார்த்தால் தலைகீழாக நிறுத்தப்பட்ட தஞ்சாவூர் பொம்மையின் நிலைதான் அவர்களுக்கும். பொதுவாக, ஓர் அணியில் வீரர்களின் மாற்றம் என்பது ஒரு தொடரை வெற்றி பெறும்போது, தோற்கும்போது, இறுதிப் போட்டியில் ஆடும்போது, டெட் ரப்பர் மேட்சில் ஆடும்போது போன்ற சமயங்களில்தான் நிகழும். ஆனால், “என்னுடன் அழைத்துச் செல்லப்படும் அனைத்து வீரர்களையுமே இத்தொடரில் கண்டிப்பாக ஆட வைப்பேன்” எனக் கடந்த இலங்கை சுற்றுப்பயணத்தின் போது டிராவிட் கூறியதை வழிமொழிந்து, எல்லா வீரர்களையும் ஆட வைத்து அழகு பார்த்து வருகிறது பிசிசிஐ. பரிசோதனை முயற்சி தவறில்லைதான், ஆனால் பரிசோதனை மட்டுமே ஒரே முயற்சி என்றால் அதுவே அணிக்கான சோதனையாக மாறிவிடும் என்பதுதான் வேதனை.
[ad_2]
Source link
sports.vikatan.com
அய்யப்பன்