Home Cinema `நானும் அந்த நாலஞ்சுபேரும் ஒழிஞ்சாதான் தமிழ் சினிமா உருப்படும்! – எம்.ஆர்.ராதா @1964 #AppExclusive

`நானும் அந்த நாலஞ்சுபேரும் ஒழிஞ்சாதான் தமிழ் சினிமா உருப்படும்! – எம்.ஆர்.ராதா @1964 #AppExclusive

0
`நானும் அந்த நாலஞ்சுபேரும் ஒழிஞ்சாதான் தமிழ் சினிமா உருப்படும்! – எம்.ஆர்.ராதா @1964 #AppExclusive

எம். ஆர். ராதா!

நாத்திகப் பிரசாரத்திற்கும், சமூகச் சீர்திருத்தங்களுக்கும் நாடக மேடையையும், நடிப்புக் கலையையும் முதன் முதலில் பயன்படுத்திய பழம் பெரும் நடிகர் எம்.ஆர். ராதா. கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் அவர், ‘விவாதத்துக்குரிய ஒரு நபராகவே இருந்து வந்திருக்கிறார். இவர் வாழ்க்கையே போராட்டமும், கிளர்ச்சியும், தடை உத்தரவும், போலீஸும், சிறைச்சாலையுமாகவே அமைந்துவிட்டது. தமக்கு உண்மை என்று தோன்றியதை பிட்டுப் பிட்டுப் பேசுவார். இவருக்குக் கற்பனை பிறக்க ஆரம்பித்துவிட்டால் பிறர் மானம் காற்றில் பறக்கும் !  

“எப்போதுமே எனக்கு விரோதிங்க அதிகம். துப்பாக்கியும் கத்தியும் இல்லாமல் நான் நாடகத்திற்குப் போகமாட்டேன். எல்லோரும் என்னைப் ‘பொல்லாதவன், ரெளடி, அநாகரிகப் பயல்’னு நினைச்சுக்கிட்டிருந்தாங்க. இன்னும் கூட ரொம்பப் பேர் அப்படித்தான் நினைச்சுக்கிட்டிருக்காங்க. இருக்கட்டும். எனக்கு ஒரு விதத்திலே அது செளகரியமாயிருக்கு. என்னைப் பார்க்கப் பயந்துகிட்டு ஒருத்தரும் எங்கிட்டே வர்ரதில்லே. அதனாலே என்னைச் சுத்தி அநாவசியக் கும்பல் கிடையாது. நான் உண்டு, என் தொழில் உண்டு, என் தோட்டம் உண்டுன்னு நிம்மதியாயிருக்கேன்.

M.R.Radha

“தோட்டமா?’’  

“ஆமா… இங்கே திருப்போரூர் போற வழியிலே கொஞ்சம் நிலம் இருக்கு. அதுலே நெல் பயிராவது. அப்புறம் கோடம்பாக்கத்துக்கு அந்தாண்டே, எம். ஜி. ஆர். தோட்டத்துக்கு எதிர்லே கொஞ்சம் வாங்கியிருக்கேன். அங்கே காய்கறியெல்லாம் போடப்பேர்றேன். மாடுங்க வேறே வளர்க்கிறேன். காலையிலே, நாலரைக்கெல்லாம் எழுந்து அங்கே போயிடுவேன். கிணறு வெட்டறது, வரப்பு கட்டறது, வேலி போடறது, இந்த வேலையெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏதோ.. சம்பாதிச்சாச்சு, வயசோ ஐம்பத்தாறு ஆவுது… இனிமே குடும்பம், கொழந்தைங்கன்னு நினைக்கத் தோணுது. விவசாயத்திலே புத்திபோவுது. இது நடுவிலே யாராவது வந்து கூப்பிட்டா, போய் நடிக்கிறேன். அவ்வளவுதான். நான் ஒருத்தரையும் போய்ப் பார்க்கிறதில்லே. சான்ஸ் கொடுன்னு கேட்கறதும் இல்லை… மத்துவங்க மாதிரி இவனைப் போடாதே, அவளோட நடிக்க மாட்டேன்னு கண்டிஷனெல்லாம் போடறதும் கிடையாது.”  

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்து வளர்ந்து, ஏழு வயதில் ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பிறகு பல கம்பெனிகள் மாறி, தனிக் கம்பெனி ஏற்படுத்திக் கொண்டவர் எம். ஆர். ராதா.

 இருபத்தியேழு வருஷத்துக்கு முன், ஒரு ஸ்டண்ட் நடிகராகச் சினிமாவில் புகுந்தார். ஸ்ரீனிவாஸா மூவிடோனில் எடுக்கப்பட்ட ‘ராஜசேகரன்’தான் அவம் நடித்த முதல் படம்.

“அந்தக் காலத்திலே என்னை, ‘டக்ளஸ் பார்பாங்ஸ்ன்’னு சொல்லு வாங்க. அவர் நடிக்கிற படங்களையெல்லாம் ஒண்ணு விடாமெ பார்ப்பேன். அவர் மாதிரி ‘ஸ்டண்ட் வேலை’யெல்லாம் செய்யோணும்னு ஆசை. ராஜசேகரன்லே நடிக்கிற போது, பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளிக் கூடத்தின் மாடியிலேருந்து கீழே குதிச்சேன். கால் முறிஞ்சு போச்சு. இப்போ ‘ட்யூப்’ (Dupe) வெச்சு ‘ஸ்டண்ட்’ செய்யறாங்களே, அதெல்லாம் அப்போ தெரியாது. டைரக்டர் ‘குதிடா’ன்னாரு, குதிச்சுட்டேன்.”

“அப்புறம் படத்தை எப்படி முடிச்சாங்க?”  

“அதெல்லாம் கெட்டிக்காரங்க. க்ளோஸப்பா எடுத்து ஒரு மாதிரி கதையை முடிச்சுட்டாங்க …. கால் குணமாக நாலு வருஷம் ஆச்சு. அப்புறம் மாடர்ன் தியேட்டர்ஸ்லே சேர்ந்து நாலஞ்சு படம் நடிச்சேன். டி. ஆர். சுந்தரத்திற்கும் எனக்கும் சின்னத் தகராறு ஒண்ணு வந்தது. அங்கே சுயமரியாதையோட வாழ முடியாதுன்னு தெரிஞ்சுது. இந்தச் சினிமாத்’தொழிலே வாணாம்னு அதுக்கு ஒரு முழுக்குப் போட்டுட்டு மறுபடியும் நாடகத்துக்கே வந்துட்டேன். அப்புறம் நான் திரும்பி வந்தது ‘இரத்தக் கண்ணீர்’ சினிமாவுக்குத்தான். பாண்டிச்சேரிலே நாடகம் போட்டுக்கிட்டிருக்கிற போது என்னை வந்து கூப்பிட்டாங்க். லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்தா நடிக்கிறேன்னு சொன்னேன். கொடுத்திாங்க. அவ்வளவு பணம் முதல்லே வாங்கின நடிகன் நான்தான்.”  

M.R.Radha

“அரசியல்லே உங்களுக்கு எப்படி சம்பந்தம் ஏற்பட்டது?”

”நான் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தது கிடையாது. திராவிடக்கட்சியிலும் நான் மெம்பர் இல்லே. ஆனா ஐயாகிட்டே ஒரு மரியாதை. அவர் பேச்சைக் கேட்டு நான் ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு காலத்திலே நான் பகவத்சிங் ஆளு. அந்தத் தியாகியின் வீரம் என் ரத்தத்திலேயும் ஒடிச்சு. அப்போ பெரியாரைக் கண்டாலே எனக்கு ஆகாது. ஒரு சமயம் நான் கொட்டகை வாடகை கொடுக்கல்லேன்னு என் சாமானையெல்லாம் ஜப்தி பண்ணிட்டாரே! அப்புறம் அவரே டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்து என் நாடகத்தைப் பார்த்தாரு. ‘இவனும் நம்ம வேலையைத்தான் செய்யறான்னு ஒப்பனை மேடை மேலே ஏறி ஒப்புக்கிட்டாரு…”  

“தமிழ் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?'”  

“தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு ஆனா. ‘சப்ஜக்ட்’தான் ‘அட்வான்ஸ்’ ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஒட்டப் பாக்கறாங்க. சொந்தப் பணித்தைப் போட்டு டிக்கெட்டை வாங்கி இரண்டு வார்த்துக்கு “ஹவுஸ் புல்” போர்டு மாட்டிச் சந்தோஷப்படறாங்க. என்னங்க வெட்கக்கேடு இது? இதுவா முன்னேற்றம்? நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்க. நானும் சர்விஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப் பட உலகம் உருப்படும். அப்போதான் முதலாளிங்க புது ஆசாமிங்களா போட்டு நல்ல கதைங்களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?’ 

M.R.Radha

” நீங்க, படத்திலே மூணு நாலு குரல்லே பேசறீங்களே. ஏன்?” 

“அதென்னமோ எனக்குத் தெரியாது. எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க. நடிக்கறபோது இயற்கையாகவே அப்படி வந்துடுது. நான் வேணும்னு குரலே மாத்தறது இல்ல.” 

“நாற்பத்தைந்து வருஷமா நடிச்சுக்கிட்டு இருக்கீங்களே, ரிடையர் ஆகணும்னு உங்களுக்குத் தோணுவதே இல்லையா?” 

“அது நம்மை விடற வரைக்கும் நாம் அதை எதுக்கு விடணும்?” 

“உங்க பையன் வாசுவும் சினிமா நடிகன் ஆகணும்னு நினைக்கிறீங்களா ?”  

“அப்படியொண்ணும் இஷ்டம் இல்லே. ஆனா, அவனுக்கு நிறைய ஆர்வம் இருக்கு. என் நாடகங்களிலேயெல்லாம் ஜோரா நடிக்கிறான். ஆனா கொஞ்சம் ஓவரா போயிடுவான்… சினிமாவிலே சான்சு கிடைச்சா தாராளமா நடிக்கட்டும். வட நாட்டுலே பிருதிவி ராஜ்கபூர், இங்கே நான். அப்பனும் பிள்ளையும் சினிமா நடிகனா இருக்கிறோம்!”

“நீங்க இந்தி நடிகர்களைச் சந்தித்திருக்கிறீர்களா ?”  

“அவங்க சென்னைக்கு வந்தா, என் படங்களைப் பார்த்துட்டு என்னைப் பார்க்கணும்னு சொல்லுவாங்களாம். என்னே வந்து பார்த்துட்டு உங்களைப் போல என்னாலே நடிக்க முடியாதுன்’னு சொல்லிட்டுப் போவாங்க. ஒம்பிரகாஷ், சுனீல்தத் இன்னும் யார் யாரோ வந்து அப்படிச் சொல்லிட்டுப் போயிருக்காங்க…”

“நீங்க நடிக்கிற படங்களையெல்லாம் நீங்க பார்க்கிற வழக்கம் உண்டா ?”  

“நான் சினிமாவுக்கே போகமாட்டேன். ‘மதர் இந்தியா’‘தோ ஆங்கே பாரா ஹாத்’ பார்த்தேன். ரத்தக் கண்ணீர், ராஜாதேசிங்கு இப்படி இரண்டு மூன்று தமிழ் படம் பார்த்திருக்கேன்.”

“உங்க நாடகங்களில் அன்றாட அரசியலைப் பற்றியெல்லாம் அலசி எடுக்கறீங்களே, பத்திரிகை படிக்க உங்களுக்கு எங்கே நேரம் கிடைக்கிறது?’’

“பத்திரிகையா? நான் பத்திரிகையே படிப்பதில்லை. எனக்குப் படிக்கவே தெரியாது. எழுத்துக்களே ‘ ‘கம்ப்போஸ்’ செய்வேன். அதாவது கொட்டை எழுத்துக்களே எழுத்துக் கூட்டிப் படிப்பேன். நான் படிச்சதெல்லாம் உலக அனுபவம் என்கிற படிப்புதான். வேறே பள்ளிக்கூடத்திற்கு நான் போனதில்லே.”  

M.R.Radha

“இந்த ஐந்தாறு வருஷமா உங்க நடிப்புக்கு ஒரு ‘மவுஸ்’ ஏற்பட்டிருக்கிறதே, அதற்கு என்ன காரணம்?”  

”அதென்னமோ! நான் என்னிக்கும் ஒரே மாதிரிதான் நடிச்சுக்கிட்டிருக்கேன். நான் நாடகத்திலே நடிச்சுக்கிட்டிருந்தபோது, என் கொள்கைகளையும் பிரசாரத்தையும் பிடிக்காதவங்க என்னைத்திட்டினாங்க. என் நாடகத்தைப் பார்க்காமலே, என்ன ‘கிரிடிஸைஸ்’ பண்ணினாங்க! இப்போ தான் ரொம்ப பேர் என் நடிப்பைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைச்சுது, புகழறாங்க. அதுக்கு நான் என்னா செய்யறது ?”  

“சினிமாவாலே சமூகத்திற்குத் தீமைதான், நன்மையே கிடையாதுன்னு சமீபத்திலே நீங்க பேசினதா படித்து விட்டு ‘இந்தத் தொழில்லே சம்பாதிச்சுகிட்டே அப்படிப்பேசுவது முறையா’ன்னு சில பேர் ஆத்திரப் பட்டாங்களே, உங்களுக்குத் தெரியுமா?’’  

“ஆமா, எங்கிட்டே கூடத்தான் சொன்னாங்க. உள்ளே இருக்கிறவனுக்குத்தான் அதிலுள்ள தீமையெல்லாம் தெரியும். அவன்தான் ‘அதாரிட்டி’யோட பேச முடியும். அதுலேயே இருந்துகிட்டு அதை திருத்தறவன்தான் தைரியசாலி!” 

(“அப்போ பெரியாரைக் கண்டாலே எனக்கு ஆகாது!” என்ற தலைப்பில் 02.02.1964 தேதியில் ஆனந்த விகடன் இதழில் இருந்து…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here