[ad_1]
இதற்கு முன்னர் 1983-ம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் 86 வது அமர்வு டெல்லியில் நடத்தப்பட்டிருந்தது. 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. ஒலிம்பிக்ஸை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்பது பெரும்பாலான நாடுகளின் கனவாக இருக்கிறதும் இந்தியாவிற்கும் அப்படியே. 1982-ல் ஆசிய போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதிலிருந்தே இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் என்கிற பேச்சு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், இன்னும் அது சாத்தியப்படவில்லை. அந்த ஒலிம்பிக்ஸ் கனவை நிறைவேற்றுவதற்கான முதல் படியாக சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் இந்த அமர்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினராக நீதா அம்பானி சேர்க்கப்பட்டதிலிருந்தே, ஒலிம்பிக்ஸ் சார்ந்த முன்னெடுப்புகள் வேகமெடுக்க தொடங்கின. 2017-ம் ஆண்டிலிருந்தே இந்த அமர்வை மும்பையில் நடத்துவதற்கான வேலைகள் தொடங்கின. 2019-ம் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி சார்பில் ஒரு குழு மும்பைக்கு வந்து இங்குள்ள வசதி வாய்ப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றது. அமர்வுகளை நடத்துவதற்கு தகுதியான இடம் என அந்தக் குழு அறிக்கை அளித்தது. அதனைத் தொடர்ந்தே இப்போது வாக்கெடுப்பின் அடிப்படையில் 140வது அமர்வை நடத்த மும்பை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் தவிர உலகம் முழுவதிலிருந்தும் பத்திரிகையாளர்களும் இந்த அமர்வின் பொருட்டு மும்பையில் முகாமிடுவார்கள். இந்த அமர்வை சிறப்பாக நடத்தி முடிக்கும்பட்சத்தில் அது இந்தியாவின் மேல் நல்ல அபிப்ராயத்தை கொடுக்கும். அதன்மூலம், அடுத்தக்கட்டமாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பையுமே கூட பெற்றுக்கொடுக்கலாம்.
முன்னதாக இந்தியா 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்தது. ஆனால், வழக்கம்போல அது கையைவிட்டு சென்றது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்த இருக்கிறது. இப்போது 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸை நடத்தும் முனைப்பில் இருக்கிறது. அதிகபட்சமாக 2048க்குள் அதாவது இந்தியா சுதந்திரமடைந்து நூறாண்டுகளை நிறைவு செய்கிற சமயத்திற்குள் ஒலிம்பிக்ஸை நடத்த வேண்டும் என்கிற தீர்க்கத்தோடு இந்தியா இருக்கிறது.
[ad_2]
Source link
sports.vikatan.com
உ.ஸ்ரீ